சிவ ஸ்தலங்களில், காயாரோகணம் எனப்படும் ஸ்தலங்கள் மூன்று. கச்சிக் காரோணம், குடந்தைக் காரோணம், நாகைக் காரோணம் என்பவையே மூன்று காரோணங்கள். இந்த மூன்று ஸ்தலங்களிலும் புண்டரீக முனிவர் இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவ பெருமான் முனிவரை தமது திருமேனியில் ஏற்றுக் கொண்டார். காயத்தில் ஆரோகணம் செய்து கொண்டதால் காயாரோகணம் எனப் பெயர் கொண்டது.
கி.பி. 273ல் 13வது பெரியவராக இருந்த ஸத்சித் கணேந்திர சங்கராச்சார்யார் ஐக்கியமான ஸ்தலம் இது.
கச்சிக் காரோணத்தில் பிரம்மா இருவரையும் ஐக்கியப்படுத்திக் கொண்டு ஆனந்த நடனம் புரிவதாக குறிப்பொன்று கூறுகிறது.
ஊழிக்காலத்தில் சிவ பெருமானே தமது தோளில் பிரம்மா, விஷ்ணுக்களை தாங்கி, பிறகு விடுவித்தார். ஹரியான திருமாலையும், விரிஞ்சனனான பிரம்மாவையும் தோளில் தரித்து காத்த செயலை ஹரி விரிஞ்சதாரண பராக்ரமம் என்பர். லிங்கத்திற்கு பின்னாலுள்ள சோமஸ்கந்த வடிவத்தில், இவருடைய வலது தோளில் பிரம்மனும், இடது தோளில் திருமாலும் இருக்கும் காட்சியைக் காணலாம். காயாரோகணம் என்றால் உலகம் பிரளயத்தில் அழியும்போது அனைத்து ஜீவராசிகளின் உடல்களையும் (காயம்) சிவன் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளுதல் என்று பொருள்.
லட்சுமி இவ்விறைவனை வழிபட்டு திருமாலை நாயகனாகப் பெற்றார். எமதர்மராஜன் இவ்விறைவனை வழிபட்டு தென் திசை அதிபதி ஆனான். பிரஹஸ்பதி இவ்விறைவனை வழிபட்டு தேவர்களுக்கு ஆசானாகப் பேறு பெற்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
பிரஹஸ்பதி வழிபட்ட ஸ்தலமாதலால் குரு ஸ்தலமாக விளங்குகிறது. வியாழக்கிழமை தினங்களில் கூட்டம் அலை மோதும்.
இங்குள்ள காயாரோகண தீர்த்தக் கரையில் பித்ருக்களுக்கு செய்யும் கர்மா சிறப்பு மிக்கது என்று கூறுகின்றனர். இக்குளத்தில் நீராடி சிவபெருமானை வழிபடுவோர்க்கு லட்சுமியின் அருள் கிடைக்கும் என ஐதீகம்.
கச்சபேஸ்வரரின் பிரம்மோத்ஸவ சமயத்தில் உத்தரவு பெற இங்கே எழுந்தருளுகிறார் எனக் கூறுவர்.
இது ஒரு தேவார வைப்புத்தலம்.
காயாரோகண ஸ்தலங்கள்: கச்சிக் காரோணம், குடந்தைக் காரோணம், நாகைக் காரோணம்.