காரைக்காலைச் சேர்ந்த தனதத்தர் எனும் வணிகரின் மகள் புனிதவதி என்பவள் பரமதத்தன் என்பவரை மணந்தாள். இருவரும் நல்ல முறையில் இல்லறம் நடத்தி வந்தனர். சிவனடியார்களை உபசரித்து, அமுது படைக்கும் நல்ல பழக்கத்தை கடைப்பிடித்தனர்.
ஒருநாள் பரமதத்தன் தனக்கு கிடைத்த இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அதே நாளில், இறைவன் - சிவனடியார் வேடம் பூண்டு புனிதவதி வீட்டிற்கு வந்தார். அவருக்கு அமுது பரிமாறிய புனிதவதி, கணவர் அனுப்பியிருந்த மாங்கனிகளில் ஒன்றை அவருக்கு பரிமாறி விட்டாள்.
பின்னர் கணவன் வந்து சாப்பிட உட்கார்ந்ததும் மீதமிருந்த மாங்கனியை இலையில் பரிமாறினாள். கனி மிகவும் சுவையாக இருக்கவே, மற்றொரு பழத்தையும் தருமாறு கேட்டார் கணவன். செய்வதறியாது திகைத்த புனிதவதி, இறைவனை வேண்டி உயர்ந்த ரக மாங்கனி ஒன்றை பெற்று, அதை பரிமாறினாள்.
நான் கொடுத்தனுப்பிய கனி இல்லையே அதை விட சிறப்பாக இருக்கிறதே என பரமதத்தன் கேட்கவே, நடந்ததை விவரித்தாள் புனிதவதி.
அம்மையாரின் தெய்வீகத்தன்மையை உணர்ந்த அவளது கணவன், அவளை நமஸ்கரித்து, தான் அவளுக்கு வேறு திருமணம் செய்து கொண்டான்.
புனிதவதி இறைவனிடம் வேண்டி, தனது அழகான உடலை விடுத்து பேய் உருவம் கொண்டு, எலும்புக் கூடாகி, சிவஞானம் பெற்று கயிலைபுகுந்தாள் என ஸ்தல வரலாறு. புனிதவதியே காரைக்கால் அம்மையார் எனப் பெயர் பெற்றாள்.
ஆனி மாசத்தில் மாங்கனி அழைத்தல் திருவிழா நடைபெறும். மக்கள் உயரமான இடத்திலிருந்து மாங்கனிகளை வீசுவார்கள். குழந்தை பாக்யம் வேண்டி நிற்பவர்கள் அவற்றை சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வார்களாம்.
மறு நாள் காலை காரைக்கால் அம்மையார் எலும்பு உடலுடன் கயிலை போகும் காட்சி ஐதீகமாக கொண்டாடுவர்.
கோவிலுக்கு வெளியே ஒரு தீப்பந்தமும், உள்ளே ஒரு தீப்பந்தமும் இருக்கும். இரண்டையும் இணைத்து ஒன்று சேர்ப்பார்கள்.