(பூமி அல்லது பாதாளம்) மலையடிவாரக் கோவில்:
மூலவர்: கொடுங்குன்ற நாதர், அம்பாள்: குயிலமுத நாயகி
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கொடுங்குன்ற நாதர். அழகிய வட்ட வடிவ ஆவுடையுடன் கூடிய சிறிய லிங்க மூர்த்தம். இவருக்கு கடோரகிரீஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு.
கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகின்றாள் ஸ்ரீ குயிலமுத நாயகி (அமிர்தேஸ்வரி).
பிரகார வலச்சுற்றில் முக்குறுணி விநாயகர், அம்மையப்பர், விசாலாட்சி உடனாய விஸ்வநாதர், மீனாட்சி உடனுறை சொக்கநாதர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
வடகிழக்கு பிரகாரத்தின் கூரையில் தொங்கும் கல் வளையங்கள் மற்றும் அரிதான விளக்கு ஒன்று ஆகியவை சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடியவை.
தெற்கு நோக்கிய சந்நிதியில் பாலமுருகன் மற்றும் இரண்டு சிவலிங்கங்கள் காணலாம். மேற்கு பார்த்த சந்நிதியில் வள்ளி - தெய்வயானை சமேத முருகப்பெருமான் கோவில் கொண்டுள்ளார். இவருக்கு மயில் வாகனத்திற்குப் பதிலாக யானை வாகனம் உள்ளது. பிரான்மலை முருகன் என்று அழைக்கப்படுகிறார்.
மலைச்சரிவில் பெரிய குளம் தேனாழி தீர்த்தம் உள்ளது.
(அந்தரம்) மலைக்கோவில்:
மலையடிவாரத்தில், மலை ஏறும் வழியருகே எழுந்தருளியுள்ள வலம்புரி விநாயகரை வணங்கி ஆசி பெற்று மலை ஏறத் தொடங்குகின்றனர். இங்குள்ள ஆலமர் செல்வரின் அழகிய தோற்றம் மனதை விட்டு அகலாதது. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளலின் சிலாரூபம் மிகவும் அழகானது.
55 படிக்கட்டுக்கள் ஏறி மலைக் கோவிலை அடையலாம். படிக்கட்டுக்கள் செங்குத்தானவை. சில இடங்களில் கைப்பிடி இருக்காது.
மூலஸ்தானத்தில் பிரான்மலை பைரவர் எழுந்தருளி அருள் புரிகின்றார். கம்பீரமான தோற்றம். அழகிய சதுர் புஜங்களில் டமருகம், கபாலம், பாம்பு ஆகியவற்றைத் தாங்கியுள்ளார். அருகே வாகனமான நாய் காணப்படுகிறது. உக்ர மூர்த்தியாக விளங்குகிறார். புனுகு சாத்தியும், வடைமாலை சாத்தியும் வழிபடுகின்றனர்.
பிரார்த்தனா மூர்த்தியாக விளங்கும் இவர் ஒரு வரப்ரசாதி. சூலம், வாள், கத்தி போன்ற ஆயுதங்கள் காணிக்கையாக குவிக்கப்பட்டுள்ளன.
உற்சவ மூர்த்தமான வடுக பைரவரின் அழகை வர்ணனையில் அடக்க இயலாது. ஐந்தடி உயரம் கொண்டு, சதுர் புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. நிர்வாண நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு கருப்பு வஸ்திரம் அணிவித்து எலுமிச்சை மாலை சாத்தி பிரார்த்தனை செய்கின்றனர்.
கார்த்திகை மாச தேய்பிறை அஷ்டமி சிறப்பானது. சம்பகா சஷ்டி கொண்டாடுகின்றனர்.
ஆணிகள் உள்ள பாதக்குறட்டின் மீது நின்று கொண்டு அருள் வாக்கு கூறுகின்றனர்.
விநாயகர், தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
(சொர்க்கம் அல்லது கயிலாயம்) மலையுச்சி கோவில்:
மலையுச்சியில் உள்ள குடைவரைக் கோவிலில் நல்மங்கைபாகர் எனப்படும் உமா மகேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சுகாசன கோலத்தில் அமர்ந்துள்ள மங்கைபாகரின் சிரசில் பிறைச்சந்திரனும் ஜடாமகுடமும் இருக்க, கடக - கேயூர அணிகலன்கள் உடலை அலங்கரிக்க அழகான திருமேனியுடன் தரிசனம் தருகின்றார்.
கரந்த மகுடம் அணிந்து, செங்கழுநீர் மலரை கரத்தில் கொண்டு, வீராசன கோலத்தில் தேனாம்பிகை தரிசனம் தருகின்றாள். மணக்கோலத்தில் அமர்ந்துள்ளனர்.
அகஸ்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய ஸ்தலம். தேவரஹஸ்ய கோலம் என்பார்கள்.
தெய்வசபை, முக மண்டபம், அர்த்த மண்டபம், அந்தராளம் ஆகியவற்றை கடந்து, கிழக்கு நோக்கியவாறு மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பாறையைக் கடைந்து உருவாக்கப்பட்டவை.
ஸ்வாமி - அம்பாள் இருவரும் சுதையாலான ரூபங்களாக இருப்பதால், ஸ்வாமி - அம்பாள் முன்பாக இருக்கும் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். அம்பாளுக்கு புனுகு கவசம் சாத்தப்படுகிறது.
மஹாலட்சுமி மண்டபத்தில் எண்ணற்ற மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். மங்கைபாகனருகேயுள்ள நடராஜர் சபை மற்றும் ஜ்வரஹரேஸ்வரரின் திருவுருவம் ஆகியவை அவசியம் தரிசிக்க வேண்டியவை. ஒரு திருமுகமும் இரு கரங்களுடனும் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமானின் முன்பாக யானை வாகனம் உள்ளது.
வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர்.