பசு வடிவிலிருந்த அம்பாள் இத்தலமருகே மேய்ந்து கொண்டிருந்த போது, பசுவின் கால் ஒரு கல் மீது பட்டு இடறியது. அது ஒரு புதையுண்டிருந்த லிங்கம். லிங்கத்தின் மீது குளம்பு இடறியதால் அதன் சுவடு லிங்கத்திருமேனியில் உள்ளது. இதனால் இவ்வூர் திருக்குளம்பியம் எனப் பெயர் கொண்டது.
'குரா' என்றால் மாட்டுக்குளம்பின் சுவடு எனப் பொருள். இதனால் இறைவன் (கோ - குரா - ஈஸ்வரர்) கோகுரேச்வரர் என்ற திருநாமம் கொண்டார். கோ பூஜித்ததால் கோழம்பநாதர் எனும் திருநாமம்.
சந்தன் எனும் வித்யாதரன் ஒரு கந்தர்வன். அவனை குயிலாக மாறும்படி சபிக்கின்றான் தேவேந்திரன். இத்தலத்திற்கு வந்து இவ்விறைவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்று சுய உருவம் கொள்கிறான் சந்தன்.
சிவலிங்கத்தின் மீது கால் இடறியதால் சிவ அபராதம் செய்து விட்டோமே என வருந்திய பசுவை, திருமால் சமாதானம் செய்து அழைத்து வந்தார். லிங்கம் பசுவின் குளம்பின் அடியில் அகப்பட்டுக் கொண்டதால், லிங்கத்திருமேனியில் வடு ஏற்பட்டது என ஸ்தல வரலாறு கூறுகிறது.
செம்பியன் மாதேவியார் கட்டிய கோவில் என்ற குறிப்பொன்று கூறுகின்றது.
தேவாரத்திருத்தலம்.