ஆதியில் இவ்வு+ருக்கு சதுர்வேதி மங்கலம், கருடன்காடு எனப்பட்ட தாக்ஷாரண்யம், ஸ்ரீ ஆதிசேஷபுரம், ஸ்ரீ சைலம் ஆகிய பெயர்கள் இருந்தன.
மலைகள் அமைந்த இப்பகுதியில் திருமகளை மணம் புரிந்து கொண்டதால் ஸ்ரீ சைலம் எனப் பெயருற்றது. 'சைலம்' என்கிற சொல்லே வெள்ளைக்காரனால் 'சேலம்' என உச்சரிக்கப்பட்டு அதுவே தொடர்கிறதாம்.
மலைகள் சூழ்ந்து காணப்பட்ட பிரதேசம் என்பதால் 'சைலம்' என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி 'சேலம்' என்றானதாக கூறப்படுகிறது. சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால் 'சேரலம்' எனப் பெயர் கொண்டு பின்னர் மருவி 'சேலம்' என்றானதாகவும் கூறுவர்.
ப்ருகு முனிவரின் மகளாகப் பிறந்து, அழகியவல்லி என்ற பெயர் கொண்டு வளர்ந்து வந்தாள் மஹாலட்சுமி. அவதரித்த தினம் மாசி மகம். சின்னத்திருப்பதி என்றழைக்கப்படும் திருமலையிலிருந்த ஸ்ரீநிவாசர், இவளை மணக்கும் யோசனையில் இக்கோவிலுக்குள்ளிருந்த புற்றில் மறைந்து இருந்தார். ஒரு நாள் வெளியே வந்து பிரம்மச்சாரி வேடம் பூண்டு, ப்ருகு முனிவரிடம் வந்து பெண் கேட்டார்.
வந்திருப்பவர் யார் என்பதை தனது ஞானக்கண்ணால் தெரிந்து கொண்ட ப்ருகு முனிவர், தனது மகளான அழகியவல்லியை ஸ்ரீநிவாசருக்கு மணம் முடித்து தந்தார். பெண் பார்க்கும் படலம் இக்கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.
ஆஞ்சநேயர் பிரம்ம பட்டம் பெற கிளம்பியபோது அப்பெருமாளின் அழகைக் கண்டு வியந்து இங்கேயே தங்கி விட்டதாக ஸ்தல வரலாறு.
பெருமாள் மறைந்திருந்த புற்றை அனைவரும் வழிபடுகின்றனர். கோட்டை இப்போது இல்லை. அதன் அடையாளமாக கோட்டைமேடு உள்ளது.