கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களுள் ஒன்று. யானை புகாத வாசல் கொண்டுள்ளது. கோவிலை ஒட்டி தேர் போன்ற விமானம் சக்கரத்துடன் காணப்படுகின்றது. இந்திரன் இக்கோவிலை விண்ணுலகு எடுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது.
மாடக்கோவில் என்பது யானை ஏறாத வண்ணம் பூமி மட்டத்திற்கு மேல் படிக்கட்டுக்களை உயரமாக அமைத்து கட்டப்படுவதை குறிப்பதாகும். கோச்செங்கட்சோழன் கட்டுவித்த கோவில்கள். கட்டுமலைக்கோவில் என்றும் கூறுவார்கள்.
பசுமையான கோரைக்கு பைஞ்சாய் எனப் பெயர். கோரை மிகுந்த ஸ்தலம் ஆதலால் சாய்க்காடு எனப் பெயர் கொண்டது.
இந்திரனின் தாய் அதிதி பூலோகத்திற்கு வந்து இவ்விறைவன் சாயாவனேஸ்வரரை வழிபட ஆசைப்பட்டாள். தாயின் ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில, இந்திரன் தனது ஐராவதம் பூட்டிய தேரைக் கொண்டு, இவ்வாலயத்தை இழுத்துக் கொண்டு இந்திரலோகம் நோக்கி புறப்பட முற்பட்டான். இச்செயலை அவனது தாயான அதிதி தடுத்து, தானே இங்கு வந்து பூஜிக்கத் தொடங்கினாள் என ஸ்தல வரலாறு.
கோவிலை தேர் கொண்டு இழுத்தபோது அம்பாள் குயில் போலக் கூவியதால், குயிலினும் நன்மொழி அம்மை எனப் பெயர் கொண்டதாக கூறப்படுகிறது.
இயற்பகை நாயனார் முக்தி பெற்ற ஸ்தலம்.
தேவாரத்திருத்தலம், சப்த வனங்களுள் ஒன்று - சாயாவனம்.
காசிக்கு சமமாக சொல்லப்படும் ஆறு ஸ்தலங்களுள் ஒன்று.