27 நட்சத்திரப் பெண்களை மனைவிகளாகக் கொண்ட சந்திரன், ரோஹிணி - கார்த்திகை ஆகிய இருவர் மீது மட்டும் தனி அன்பு காட்டியதால், மற்ற மனைவிகள் வெறுப்படைந்து அவர்களின் தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். இதனால் கோபமுற்ற தட்சனின் சாபத்தைப் பெற்ற சந்திரன் நோயுற்றான். அகஸ்தியரின் யோசனைப்படி இத்தலத்திற்கு வந்து, தீர்த்தம் ஒன்றை அமைத்து, லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான் எனவும், இவ்விறைவனையும் அம்பாளையும் வழிபட்டு நோய் நீங்கப் பெற்றதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது. சந்திரன் தான் கொண்ட சாபம் நீங்கப் பெற்று, இறைவன் திருமுடியில் இடம் பெற்றான் எனவும் ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது.
ராவணனால் கவரப்பட்டுச் செல்லப்பட்ட சீதையைத் தேடி ஸ்ரீ ராமன் வானரப் படைகளுடன் இத்தலம் வந்து சோமநாதரை வழிபட்டார். "சீக்கிரமே சீதையை அடைவாய்" என்ற ஆசியையும் பெற்றார் என ஸ்தல வரலாறு. கூட வந்த வானர சேனைகளின் பசி தீர்த்த இடம் என்பதால், 'வானரமதுரை' எனப் பெயர்பெற்று, பின்னர் மருவி 'மானாமதுரை' என்றானது எனக் கூறப்படுகிறது.
திருவிளையாடல் புராணத்தில் சொக்கநாதப் பெருமான் குதிரை வியாபாரியாக வந்து அரிமர்த்த பாண்டியனிடம் குதிரைகளின் கயிறுகளை மாற்றிக்கொண்ட ஸ்தலம் எனக் கூறுவர்.
வைகை நதி கிழக்கு நோக்கிச் சென்று தட்சிணவாகினியாகத் திரும்பும் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது.