அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான குலச்சிறையார் பிறந்த மற்றும் முக்தி அடைந்த ஸ்தலம் இது. இவர் நின்றசீர் நெடுமாறன் மற்றும் மங்கையர்க்கரசியார் ஆண்ட காலத்தில் மந்திரியாகப் பணியாற்றியவர். மக்கள் குலத்தைக் காத்ததினாலும், அடியார்களுக்குப் பணிவிடைகளைச் செய்பவராயிருந்ததாலும் குலச்சிறை நாயனார் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
கூன் பாண்டியன் என்பவன் இந்நாட்டின் மீது படையெடுத்து, வென்று, பின்னர் தோற்றவனுக்கே நாட்டைத் திருப்பித் தந்து, அவனது மகள் மங்கையர்க்கரசியையும் மணந்துகொண்டு சென்றான் என ஒரு வரலாற்று குறிப்பு கூறுகிறது.
இந்நாட்டிலிருந்து சீதனமாக குலச்சிறையாரையும் கூன்பாண்டியனோடு மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
சமணர்கள் கூன் பாண்டியனைச் சைவநெறிகளைப் புறக்கணிக்க வைத்து, சமணத்தில் வைத்திருந்தனர். கூன் பாண்டியனுக்கு நன்னெறியைப் புகட்டி அவனை மீண்டும் சைவ சமயத்திற்குக் கொண்டு வர ஆசைப்பட்ட குலச்சிறையார், ஞானசம்பந்தரின் உதவியை நாடினார். சம்பந்தரும் இவ்வூருக்கு வந்து வாசீக மடத்தில் தங்கினார். சமணத்தின் ஆற்றலால் இம்மடம் தீப்பற்றக் கடவது எனக் கூறி, அது நடவாததால் உண்மையாகவே தீ வைத்தார்கள் சமணர்கள். அந்தத் தீ கூன்பாண்டியனைத் தாக்கி அவனுக்கு வெப்ப நோயை உண்டு பண்ணியது.
"மந்திரமாவது நீறு... வானவர் மேலது நீறு..." என்று பதிகம் பாடிய சம்பந்தர், வெப்பம் தாக்கிய இடத்தில் திருநீறைப் பூசியதில், மன்னனின் வெப்ப நோய் நீங்கியது.
இந்தச் சமயத்தில் மூன்று வாதங்கள் சமணத்திற்கு எதிராக நிகழ்ந்தன. கூன்பாண்டியனுக்கு வெப்ப நோய் தீர்த்த நிகழ்வு முதலாவதானது - அது கரவாதம்.
திருநள்ளாற்று அம்பாள் போகமார்த்த பூண்முலையாள் பதிகத்து ஓலைச்சுவடியைக் கட்டிலிருந்து உருவி தீயிலிட்டு நிகழ்த்தியது இரண்டாவது - அது புனல்வாதம்.
சீறி வரும் வைகை நதியை எதிர்கொண்ட சம்பந்தரின் ஓலைச்சுவடு நிகழ்த்தியது மூன்றாவது - அது புனல்வாதம் (திருவேடகம்). மிதந்து வந்த ஓலையை எம்பி எம்பி பார்த்த கூன் பாண்டியனின் கூன் நிமிரப் பெற்று நின்றசீர் நெடுமாறன் என்ற பெயரைக் கொண்டான்.
இத்தலம் ராகு/கேது மற்றும் காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தரும் ஸ்தலம் எனப் போற்றப்படுகிறது. இங்குள்ள அரச மரத்தின் கீழ் எள்ளுருண்டைகளை வைத்து நைவேத்தியம் செய்து சுற்றி வந்தால் திருமணத்தடை நீங்குவதாக நம்பிக்கை. பெரிய புராணப் பாடல் பெற்ற ஸ்தலம்.