ஞானசம்பந்தர் சிவஸ்தல யாத்திரையை ஆரம்பித்ததும் வந்த முதல் இடம் திருக்கோலக்கா. குழந்தை சம்பந்தர் தனது சின்னஞ்சிறு கைகளைத் தட்டி, தாளமிட்டு பதிகம் பாட ஆரம்பித்ததும், குழந்தையின் கைகள் வலிக்குமே என இவ்விறைவன் இரண்டு பொற்றாளங்களைக் கொடுத்தான். அந்த பொற்றாளங்களுக்கு ஓசையை அருளினாள் அம்பாள். இதனால் இறைவன் தாளபுரீஸ்வரர் என்றும் அம்பாள் ஓசை கொடுத்த நாயகி என்றும் பெயர்களைக் கொண்டனர்.
இத்தலத்தில் சூரியன் தன் பெயரால் தீர்த்தம் ஒன்றை அமைத்து, இங்கு தவம் மேற்கொண்டு, இறைவனை வழிபட்டு, மூவுலகங்களின் தலைவனாகும் வரத்தையும், தன்னை வணங்குபவர்கள் நிகரற்ற செல்வத்தை அடையும்படியான வரத்தையும் பெற்றான்.
மகாலட்சுமி இத்தலத்தில் தவமிருந்து மகாவிஷ்ணுவை மீண்டும் கணவனாக அடைந்தாள். இவளுக்கு வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்பவர்களுக்கு திருமணப்பேறு நிச்சயம்.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.