தேவேந்திரனின் மந்திரியான விசுமுகன் என்பவனுக்கு மந்திரன் என்றொரு பெயரும் உண்டு. இத்தலம் வந்த மந்திரன் இங்குள்ள சுயம்புலிங்கத்தை பூஜித்து வழிபட்டான். பிரத்யட்சமான இறைவனிடம் தனக்கு சாயுஜ்ய பதவி கேட்டுப் பெற்றான். மந்திரன் வழிபட்டதால் இறைவனுக்கு மந்திரலிங்கம் என்ற பெயர் வந்தது. இவனுக்கு அசுரர்களால் பலமுறை அபகரிக்கப்பட்ட வேதங்கள் நான்கும் இத்தலத்தில் புன்னை மர உருவில் இருந்து இங்குள்ள சுயம்பு லிங்கத்திற்கு நிழல் அளித்து வந்தன. இதனால் இங்கு கோவில் கொண்ட இறைவன் புன்னைவனநாதர் எனப்பட்டார்.
நகுஷ மன்னன் என்பவனின் சிவிகையை அகஸ்தியர் சுமந்து கொண்டு செல்லும்போது முனிவரை காலால் உதைத்ததால் மலைப்பாம்பாக உரு மாறினான். அந்த சாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கு தவமிருந்து சாப விமோசனம் பெற்றான்.
திருக்கடவூரில் இறைவனால் தண்டிக்கப்பட்ட யமன் இங்கு ஒரு கொடி வடிவில் கிடந்தான். இதனால் பூமியின் பாரம் அதிகரிக்கவே, பூமிமாதேவி இத்தலம் வந்து இறைவனை பூஜித்து தினமும் மலர்களால் அர்ச்சித்து சுரைக்கறியமுது நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தாள்.
இறைவன் யமனை உயிர்ப்பித்து பூமி தேவியின் பாரத்தை குறைத்தார். இந்த நிகழ்வினால் இவ்விறைவனை பூமிநாதர் என்கின்றனர்.
பூமிதேவி உண்டாக்கிய நேமி தீர்த்தம் இங்கு உள்ளது. யமன் இவ்விறைவனை வழிபட்டு தரும தீர்த்தம் உண்டாக்கினான். இதனால் இவ்விறைவனுக்கு தருமநாயகர் என்ற பெயர் உண்டாயிற்று.
சுகுணசீலன் எனும் அரசன் பூமிநாதர் அருளால் கிடைத்த புதல்வனுக்கு வீரகண்டன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். வீரகண்டன் ஆட்சி பொறுப்பேற்றதும் இவ்வாலயத்தைக் கட்டினான். அவன் வழியே வந்த வீரமாறன் கானகத்தில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சாரை சாரையாக எறும்புகள் போவதைப் பார்த்து அவற்றை பின் தொடர்ந்து சென்றதில் இந்த கோவிலை கண்டுபிடித்து, இக்கோவிலை புதுப்பித்து விரிவுபடுத்தி ஸ்தாபித்தான் என ஸ்தல வரலாறு. இதனால் இவ்வூருக்கு வீரவநல்லூர் எனப் பெயர் வழங்கலாயிற்று.