இத்தலத்தில், மதங்கர் எனும் முனிவர் தவம் மேற்கொண்டார். பிரத்யட்சமான சிவபெருமானிடம், இத்தலத்தில் வழிபட்டு
பூஜிப்பவர்களுக்கு தர்மார்த்த காம மோட்சம் கிட்ட வேண்டும் என்று பிரார்த்தித்தார். பின்னர் லலிதாம்பிகையைக்
குறித்து தவம் மேற்கொண்டார். பஞ்சதசி எனும் மந்திரத்தை அக்ஷரலட்சம் ஜெபித்தார். ப்ரத்யட்சமான அம்பிகையிடம்
தனக்கு புத்ரியாகப் பிறந்து தனது ஆஸ்ரமத்தில் வளர்ந்து, சிவபெருமானை மணக்க வேண்டும் என வேண்டுகோள்
விடுத்தார்.
யோக மாயையான மந்திரிணி தேவி பரமேஸ்வரனை மணப்பாள் என்றும், மீண்டும் அவள் - உன் பிள்ளைக்கு புத்ரியாக
அவதரிக்கும் காலத்தில் ஸ்வேதநாதரை மணப்பாள் என்றும் வரமளித்தாள் அம்பிகை.
திருவெண்காட்டு இந்திர விழாவில் மருத்துவாசுரனின் சம்ஹாரத்தின்போது நந்தியை அனுப்பியதால் இத்தலத்து நந்தி
திருவெண்காட்டை நோக்கியபடி உள்ளதாக கூறப்படுகிறது.
முன்நாளில் சித்ரா பௌர்ணமி சமயத்தில் 11 தலத்து ரிஷப சேவை நடைபெற்று வந்ததாக குறிப்பு ஒன்று கூறுகிறது.
தேவார வைப்புத்தலம் - ஏகாதச ருத்ர பீடங்களுள் - தத்புருஷ பீடம்.
ஏகாதச ருத்ர பீடங்கள் தோன்றிய வரலாறு:
சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர்பாகத்தை தராமலும், அவமானப்படுத்தி தட்சன்
செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி போனாள் பார்வதி. எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக்
கொள்ளாமல் செருக்குடன், யாகத்தை தொடர்ந்து நடத்தினான் தட்சன்.
யாகத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக் கொண்டாள்
பார்வதி.
நடந்தவைகள் அனைத்தையும் அறிந்து கொண்ட சிவபெருமான் ஆவேசம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார்.
உக்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி,
ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும் போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி
ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக் கொண்டிருந்தனர். இதுவே ருத்ர பீடங்கள் தோன்றிய
வரலாறு.