யாழ் இசைப்பதில் மிகுந்த திறமை கொண்டிருந்ததால் யாழ்ப்பாணர் கர்வம் கொண்டார். பாணர் யாழ் இசைக்காவிட்டால், சம்பந்தரின் பாடல் சிறப்பெய்துமா என்ற பொருளில் பாணரின் சுற்றத்தார்கள் பேசினார்கள். மாதர்மடப்பிடி எனும் யாழ்முரிப் பண்ணை சம்பந்தர் பாடினார். சம்பந்தரின் பதிகத்திற்கேற்றவாறு யாழிசை அமைக்க முடியவில்லையே என வருந்திய பாணர், தன் உயிரை விடச் சென்றார்.
காட்சி தந்த இறைவன் அவரைத் தடுத்து, சம்பந்தரின் பதிகத்திற்கு ஏற்ப நடனம் ஆடினார். யாழ்ப்பாணரும் கர்வம் நீங்கப் பெற்றார். அம்பாள் தேனினும் இனிய குரலில் பாடினாள். இதனால் அம்பாளுக்கு மதுராம்பிகை என்றும் தேனமிர்தவல்லி என்றும் பெயர்கள் வந்தன.
மார்க்கண்டேயனைக் கொல்லப் பாசம் வீசிய காலன், அந்தப் பாவம் நீங்க சிவ ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு, இத்தலம் வந்து தவமிருந்தான். யம சம்ஹாரம் நிகழ்ந்ததினால் பூமியில் பிறந்த உயிர்கள் இறவாது இருந்ததால், பூமி பாரம் தாங்கமாட்டாமல், பூமிமாதேவி வேண்டியதாலும் யமன் மீண்டும் பதவி பெற்று இவ்விறைவனைப் பூஜித்தான். இதனால் இவ்வூருக்கு தர்மபுரம் எனப் பெயர் வந்தது.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.