அருள்மிகு ஸ்ரீ சுகவனேச்வரர் திருக்கோவில் (சேலம்)

Primary Deity
ஸ்ரீ சுகவனேச்வரர் எனப்படும் கிளிவனநாதர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

வியாசருக்கும் திலோத்தமைக்கும் பிறந்த சுகர் எனும் முனிவர் ஒரு சமயம் சத்யலோகம் சென்று அங்கு சரஸ்வதி தேவியை தரிசித்தார். அப்போது சரஸ்வதி தேவி, 'பிரம்மன் படைக்கும் உருவங்களுக்கு குரலும் மொழியும் நான்தான் கொடுக்கின்றேன், எனவே நானே வலிமை மிக்கவள்' எனக் கூறினாள்.

பிரம்மதேவன் நடுவே அமர்ந்திருக்க, சுற்றிலுமுள்ள தவசிகள் பிரம்மனையும் அவர் மேற்கொண்ட படைப்புத் தொழிலைப் பற்றியும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சரஸ்வதி தேவி தன்னிடம் கூறியதை அந்த கூட்டத்தின் மத்தியில் எடுத்துரைத்தார் சுக முனிவர்.

'ஒருவர் சொன்னதை அப்படியே திருப்பி திருப்பிச் சொல்லும் கிளியின் பழக்கத்தைக் கொண்டுள்ளதால் நீ கிளியாகக் கடவாய்' என பிரம்மதேவன் சபித்துவிட்டார். கிளி வடிவம் கொண்ட சுக முனிவர் தான் கொண்ட சாபம் நீங்கப் பெற இத்தலத்திற்கு வந்து இங்குள்ள பலா மரத்தில் மற்ற கிளிகளுடன் சேர்ந்து வசித்து வந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவநாமங்களை சொல்லிக் கொண்டிருந்தது அந்தக் கிளி.

கவண்கல் கொண்டு கிளிகளை வேட்டையாடினான் வேடன் ஒருவன். உயிருக்கு பயந்த கிளிகள் அருகே இருந்த புற்றில் ஒளிந்து கொண்டன. மண் வெட்டியால் புற்றை வெட்டினான் வேடன். மற்ற கிளிகளெல்லாம் உயிரை விட்டன. புற்றுக்குள்ளிருந்த சுயம்பு லிங்கத்தின் திருமுடியில் உட்கார்ந்து கொண்டார் கிளி வடிவ சுகர். லிங்கத்தின் திருமுடி மீது வெட்டுப்பட்டதால் ரத்தம் பெருகி தழும்பும் ஏற்பட்டது. கிளி வடிவ சுகரும் இறக்க நேரிட்டது. செய்த பிழைக்காக தனது உயிரையும் மாய்த்துக் கொண்டான் வேடன்.

இறந்து கயிலாயம் சென்ற கிளி, இறைவனருளால் சாபம் நீங்கப் பெற்று திவ்ய உடலைப்பெற்று கிளி முகத்துடன் சுகபிரம்ம ரிஷி எனும் பெயருடன் திரும்பியதாக ஸ்தல வரலாறு.

இதனால் இறைவனுக்கு கிளிவனநாதர், சுகவனேஸ்வரர் ஆகிய திருநாமங்கள் உண்டாயின.

சேர - சோழ - பாண்டிய மன்னர்களால் இந்நகரும் ஆலயமும் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டதால் மும்முடித் தலைவாயில் என அழைக்கப்படலாயிற்று. மலைகள் சூழ்ந்து காணப்பட்ட பிரதேசம் என்பதால் சைலம் என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி சேலம் என்றானதாக கூறப்படுகிறது. சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால் சேரளம் எனப் பெயர் கொண்டு பின்னர் மருவி சேலம் என்றானதாகவும் கூறுவர்.

வளர் பிறையிலும், தேய் பிறையிலும் திரயோதசி திதி நாளில் சூரியன் மறைவதற்கு முன்பாக மூன்றேமுக்கால் நாழிகையும், பின்னுள்ள மூன்றேமுக்கால் நாழிகையும் (ஆலகால விஷம் உண்டருளிய காலம்) பிரதோஷ காலம் என இக்கோவிலில் விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

மூலவர்: ஸ்ரீ சுகவனேச்வரர் எனப்படும் கிளிவனநாதர். அம்பாள்: ஸ்வர்ணாம்பிகை எனப்படும் பசும் பொன் நாயகி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சுகவனேச்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். அழகிய பெரிய திருமேனி. மூலலிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கின்றது. திருமுடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு காணப்படுகின்றது. ஆவுடையார் பிற்பாகம் இரண்டு பிரிவாகவும், விஷ்ணு பாகம் சோமசுந்தரம் ஒரே பீடமாக சேர்க்கப் பெற்றது.

இவருக்கு மும்முடிநாதர், பாபநாசேச்வரர், கிளிவனநாதர் ஆகிய திருநாமங்களும் உண்டு.

வெளியே உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டுள்ள சந்நிதியை தரிசிக்கலாம். சுக முனிவரின் உற்சவ மூர்த்தம் மிகவும் அழகாக இருக்கின்றது. நடராஜரின் உற்சவ மூர்த்திக்கு இருபுறமும் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் சிலைகள் உள்ளன.

மகா மண்டபமருகே வியாசர், சுகபிரம்ம ரிஷி, ஆஞ்சநேயர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.

தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஸ்வர்ணாம்பிகை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கருணையே வடிவாகவும், அழகே உருவாகவும் காட்சி தரும் இவள் கஞ்சமலை சித்தரின் உபாசனா தெய்வம். காஞ்சி ஆச்சார்ய ஸ்வாமிகள் தாடங்க பிரதிஷ்டை செய்துள்ளார். இவளுக்கு மரகதவல்லி, பச்சைவண்ண நாயகி ஆகிய திருநாமங்களும் உண்டு. பசும் பொன் நாயகி எனத் தூய தமிழில் அழைக்கின்றனர்.

பிரகார வலச்சுற்றில் எண்ணற்ற மூர்த்தங்களை தரிசிக்கலாம். மேற்கு பிரகாரத்தில் வலம்புரி விநாயகரை காணலாம். (இரட்டை விநாயகர்கள்) ஒளவையாரை தனது துதிக்கையால் தூக்கிக் கொண்டு போய் கயிலாயத்தில் சேர்த்தவர் இந்த வலம்புரி விநாயகர். இங்குள்ள விகடசக்ர விநாயகர் அவசியம் தரிசிக்க வேண்டிய திருவுருவம்.

வள்ளி, தெய்வானை தேவியர்கள் உடனாய முருகப் பெருமானின் சந்நிதிக்கு வெளிப்புற சுவரில் அறுபடை வீட்டு மூர்த்திகளின் அழகிய சிற்பங்களைக் காணலாம். நவகிரக சந்நிதியின் மேல் தளத்தில் பல்லி - உடும்பு ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஜ்யேஷ்டா தேவியும், எருது முகங் கொண்ட அவளது புதல்வர்களும் தனியே இடம் பெற்றுள்ளனர்.

வட பகுதியில் மேற்குப் பார்த்து பெரிய நந்தி காணப்படுகிறது. அதையடுத்துள்ள கிணறு ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்டது. இதில் ஆதிசேஷன் நீராடியதால் தவளைகள் வசிக்காது என்பர். அமண்டூக தீர்த்தம் என்று அழைக்கின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...