வியாசருக்கும் திலோத்தமைக்கும் பிறந்த சுகர் எனும் முனிவர் ஒரு சமயம் சத்யலோகம் சென்று அங்கு சரஸ்வதி தேவியை தரிசித்தார். அப்போது சரஸ்வதி தேவி, 'பிரம்மன் படைக்கும் உருவங்களுக்கு குரலும் மொழியும் நான்தான் கொடுக்கின்றேன், எனவே நானே வலிமை மிக்கவள்' எனக் கூறினாள்.
பிரம்மதேவன் நடுவே அமர்ந்திருக்க, சுற்றிலுமுள்ள தவசிகள் பிரம்மனையும் அவர் மேற்கொண்ட படைப்புத் தொழிலைப் பற்றியும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சரஸ்வதி தேவி தன்னிடம் கூறியதை அந்த கூட்டத்தின் மத்தியில் எடுத்துரைத்தார் சுக முனிவர்.
'ஒருவர் சொன்னதை அப்படியே திருப்பி திருப்பிச் சொல்லும் கிளியின் பழக்கத்தைக் கொண்டுள்ளதால் நீ கிளியாகக் கடவாய்' என பிரம்மதேவன் சபித்துவிட்டார். கிளி வடிவம் கொண்ட சுக முனிவர் தான் கொண்ட சாபம் நீங்கப் பெற இத்தலத்திற்கு வந்து இங்குள்ள பலா மரத்தில் மற்ற கிளிகளுடன் சேர்ந்து வசித்து வந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவநாமங்களை சொல்லிக் கொண்டிருந்தது அந்தக் கிளி.
கவண்கல் கொண்டு கிளிகளை வேட்டையாடினான் வேடன் ஒருவன். உயிருக்கு பயந்த கிளிகள் அருகே இருந்த புற்றில் ஒளிந்து கொண்டன. மண் வெட்டியால் புற்றை வெட்டினான் வேடன். மற்ற கிளிகளெல்லாம் உயிரை விட்டன. புற்றுக்குள்ளிருந்த சுயம்பு லிங்கத்தின் திருமுடியில் உட்கார்ந்து கொண்டார் கிளி வடிவ சுகர். லிங்கத்தின் திருமுடி மீது வெட்டுப்பட்டதால் ரத்தம் பெருகி தழும்பும் ஏற்பட்டது. கிளி வடிவ சுகரும் இறக்க நேரிட்டது. செய்த பிழைக்காக தனது உயிரையும் மாய்த்துக் கொண்டான் வேடன்.
இறந்து கயிலாயம் சென்ற கிளி, இறைவனருளால் சாபம் நீங்கப் பெற்று திவ்ய உடலைப்பெற்று கிளி முகத்துடன் சுகபிரம்ம ரிஷி எனும் பெயருடன் திரும்பியதாக ஸ்தல வரலாறு.
இதனால் இறைவனுக்கு கிளிவனநாதர், சுகவனேஸ்வரர் ஆகிய திருநாமங்கள் உண்டாயின.
சேர - சோழ - பாண்டிய மன்னர்களால் இந்நகரும் ஆலயமும் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டதால் மும்முடித் தலைவாயில் என அழைக்கப்படலாயிற்று. மலைகள் சூழ்ந்து காணப்பட்ட பிரதேசம் என்பதால் சைலம் என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி சேலம் என்றானதாக கூறப்படுகிறது. சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால் சேரளம் எனப் பெயர் கொண்டு பின்னர் மருவி சேலம் என்றானதாகவும் கூறுவர்.
வளர் பிறையிலும், தேய் பிறையிலும் திரயோதசி திதி நாளில் சூரியன் மறைவதற்கு முன்பாக மூன்றேமுக்கால் நாழிகையும், பின்னுள்ள மூன்றேமுக்கால் நாழிகையும் (ஆலகால விஷம் உண்டருளிய காலம்) பிரதோஷ காலம் என இக்கோவிலில் விமரிசையாக கொண்டாடுகின்றனர்.