தேவேந்திரன் சாப விமோசனம் பெற்ற ஸ்தலங்கள் மூன்று - அவை மல்லிகார்ஜுணம் (ஸ்ரீ சைலம்), மத்யார்ஜுணம் (திருவிடைமருதூர்), நெல்லை புடார்ஜுணம் (திருப்புடைமருதூர்).
அர்ஜுணம் என்றால் மருதமரம். புடை உடைய ஒரு மருத மரத்தின் கீழ் முளைத்தெழுந்த இறைவன் என்பதாலும், நாற்புறமும் மருத மரங்கள் இருப்பதாலும், மருத மரப் பொந்தில் இறைவன், இந்திரனுக்கு காட்சி தந்ததாலும், இவ்வூர் புடைமருதூர் என்றாகி திரு சேர்த்து திருப்புடைமருதூர் என்றானது.
பிரம்மாவின் மகனாகிய மனு ஸ்வயம்பு லிங்கங்களை தரிசித்து வர யாத்திரை மேற்கொண்டிருந்தபோது இத்தலத்திற்கு வந்தான். மலைமகள் - திருமகள் - கலைமகள் - பூமகள் ஆகியோர் இவ்விறைவனை வணங்கும் காட்சியைக் கண்டு, அது போன்ற தரிசனம் தனக்கு கிடைக்கவில்லையே என ஆதங்கப்பட்டு வாள் கொண்டு தன்னை வெட்டிக் கொள்ள முற்பட்டபோது, இறைவன் பிரத்யட்சமாகி தடுத்தாட் கொண்டார் என ஸ்தல வரலாறு.
கருவூர் சித்தர் ஸ்தல யாத்திரை நிமித்தமாக பொருநையாற்றின் வடகரை வந்தபோது, ஆற்றின் பெருவெள்ளம் காரணமாக, இவ்விறைவனை தரிசிக்க முடியவில்லை. இதனால் மனம் வருந்திய சித்தருக்கு, ஆற்றின் மறு கரையிலிருந்து நல்ல மணமுள்ள மருத மலர்களின் வாசனை வந்தது. அதனால் நல்ல மணம் வீசும் பூக்களின் நடுவே கோவில் கொண்ட நாதா என்ற பொருள் படும்படி பாடினார் என ஸ்தல வரலாறு. இதனால் இவ்விறைவன் நாறும்புநாதர் என்ற திருநாமத்தைக் கொண்டார்.
தேவர்களுடன் நடத்திய யுத்தத்தில் கொல்லப்பட்ட அசுரர்களின் தாயான ததி என்பவள் தேவர்களை பழி வாங்கும் எண்ணத்துடன், துவஷ்டா எனும் முனிவரிடம் போய் அவரது மகனை இந்திரன் கொன்று விட்டதாக கூறினாள். இதனால் கோபமடைந்த முனிவர் வேள்வித்தீயை மூட்டி, அதிலிருந்து விருத்திரன் எனும் அசுரனை உண்டுபண்ணி, இந்திரன் மீது ஏவினார். ததீசி எனும் முனிவரின் முதுகெலும்பை பெற்று அதிலிருந்து வஜ்ராயுதம் தயார் செய்த இந்திரன், அதனைக் கொண்டு விருத்திரனைக் கொன்றான்.
விருத்தாசுரனைக் கொன்றதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. அதைப் போக்கிக் கொள்ள பல புண்ய க்ஷேத்ரங்களுக்கு பயணம் மேற்கொண்டான் இந்திரன். இந்திரனின் மனைவியான இந்திராணி இத்தலத்தில் தவமிருந்து வந்தாள். இத்தலத்திற்கு வந்த இந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட்டு தனக்கு சாப விமோசனம் அளிக்குமாறு வேண்டினான் என ஸ்தல வரலாறு.
மருதமரப் பொந்து ஒன்றில் தோன்றிய இறைவன் இந்திரனுக்கு காட்சி தந்து அவனுக்கு சாப விமோசனம் அளித்ததாக ஸ்தல வரலாறு.