உபரிசரவஸு என்னும் மன்னன் எப்போதும் தனது தேரில் அமர்ந்து ஆகாஸத்தில் சஞ்சரிக்கும் வரத்தை பெற்றவன். தேரின் நிழல் எதன் மீது பட்டாலும் அதற்கு துன்பங்கள் நேர வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தான். இதனால் அகங்காரம் கொண்டு அலைந்தான். இத்தலத்தின் மீது தேர் பறக்கும்போது 'கீழே தேரை இறக்குங்கள், இத்தலத்து தேவாதிராஜனை சேவித்து விட்டு போகலாம்' என்று அவனது மனைவி கூறியதை பொருட்படுத்தாது, தேர் வேகமாக செல்ல உத்தரவிட்டான்.
அவனது அகம்பாவத்தை அடக்க நினைத்த தேவாதிராஜன் கருடாழ்வாருக்கு சமிக்ஞை செய்தார். கீழே படிந்த தேரின் நிழல் மீது தனது பெருவிரலை வைத்து அழுத்தினார் கருடாழ்வார். தேரானது வேகமாக கீழே இறங்கி கோவிலுக்கு முன்னாலுள்ள திருக்குளத்தில் விழுந்தது. கீழே விழுந்த தேர் அழுந்தப் பெற்ற இடம் என்பதால் தேர் அழுந்தூர் (தேரழுந்தூர்) என இவ்வூருக்கு பெயர் வந்தது.
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இடையே நடைபெற்ற விவாதம் ஒன்றினில், பாரபட்சமாக தேவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய உபரிசரவஸுவை, முனிவர்கள் சபித்து பூமியில் விழச் செய்தனர் என்றும், அப்போது அவனது தேர் அழுந்தப் பெற்றதென்றும், கதை ஒன்று வழக்கில் இருக்கின்றது.
அகஸ்தியரின் யோசனைப்படி, செய்த பிழையை பொறுத்தருள வேண்டி தவமிருந்தான் உபரிசரவஸு. பிரத்யட்சமான தேவாதிராஜன் அவனது தேரை மீண்டும் வானில் பறக்கவிடலாம் எனும் வரத்தையும், தேர் அழுந்திய குளத்தில் நீராடி தன்னை சேவிக்கும் பக்தர்களுக்கு நற்கதி அளிப்பேன் எனும் வரத்தையும் அருளினார்.
ஆயிரம் குடங்களில் வெண்ணை சேகரித்துக் கொண்டு வந்து காலடியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆமருவியப்பன் கூறியதாகவும், எவ்வளவு முயன்றும் உபரிசரவஸுவினால் 999 குடங்களில் மட்டுமே சேகரிக்க முடிந்ததாகவும், ஒரு காலிக் குடத்தை நடுவில் வைத்து 1000 குடங்களில் வெண்ணை இருப்பதாக கூறி கண்ணனை ஏமாற்ற உபரிசரவஸு முயன்றதாகவும், எல்லாக் குடங்களையுமே காலிக் குடங்களாக கண்ணன் மாற்றி வைத்து உபரிசரவஸுவற்கு பாடம் கற்பித்ததாகவும், பின்னர் மன்னிப்பு கேட்ட உபரிசரவஸுவிற்கு வரங்கள் தந்ததாகவும் - கூறப்படுவதுண்டு.
கோகுலத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், பசுக்களை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு தண்ணீர் அருந்த யமுனைகரைக்கு சென்றான். வேடிக்கை செய்வதாக நினைத்துக் கொண்டு, பிரம்மா யமுனைக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களை, காவிரிக்கரையிலுள்ள தேரழுந்தூரில் கொண்டு வந்து விட்டார். திரும்பி வந்த கிருஷ்ணன், நடந்ததை யூகித்து விட்டான். புதியதொரு பசுக்கூட்டங்களை தோற்றுவித்தான் கண்ணன். தனது முயற்சி தோல்வி அடைந்ததைக்கண்ட பிரம்மா, ஆவினங்களுடன் தேரழுந்தூருக்கு வந்து கோவில் கொள்ளுமாறு, கண்ணனிடம் பிரார்த்தித்தார். பிரம்மாவின் வேண்டுகோளுக்காக இங்கு வந்தவரே ஆமருவியப்பன்.
கருடாழ்வாரிடம் ஒரு விமானத்தையும், வைர முடியையும் கொடுத்து அவைகளுக்குரிய பெருமாள்களிடம் சேர்ப்பிக்க சொன்னான் தேவேந்திரன். வைர முடியை திருநாராயணபுரத்து செல்லப் பிள்ளையிடமும், விமானத்தை இத்தலத்து தேவாதிராஜனிடமும் சேர்ப்பித்தார் கருடாழ்வார். இதனால் மகிழ்ந்த பெருமாள் கருடாழ்வாருக்கு தம் பக்கத்திலேயே இருக்க இடம் தந்தார் என ஸ்தல வரலாறு. மற்ற கோவில்களில் பெருமாளை எதிர்நோக்கி இருக்கும் கருடாழ்வார், இங்கு மட்டும் பக்கத்தில் இருக்கும் காரணத்தை விளக்குகிறது ஸ்தல புராணம்.
அகஸ்தியரிடம் பெற்ற சாபத்திலிருந்து விடுபட வேண்டி தவமிருந்த காவிரித்தாய், தேவாதிராஜன் அருகே இடம் பிடித்தாள் என ஸ்தல வரலாறு.
உபரிசரவஸுவின் தேரை பூமியில் அழுத்திய நிகழ்வு நடைபெற்ற நாள் தை அமாவாசை தினம். தர்சம் என்றால் அமாவாசை. இதனால் தேர் அழுந்திய திருக்குளத்திற்கு தர்சன புஷ்கரிணி எனப் பெயர் வந்தது.
வடகலை சம்ப்ரதாயம். பாஞ்சராத்திர ஆகம முறைப்படி பூஜைகள் நடக்கின்றன.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பஞ்ச கிருஷ்ணாரண்யங்களுள் ஒன்று.