மூலவர்: ஆரண்யேஸ்வரர், அம்பாள்: அகிலாண்டேஸ்வரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஆரண்யேஸ்வரர். சதுர ஆவுடை கொண்டு கம்பீரமாக தரிசனம் தருகின்றார். சுயம்பு லிங்க மூர்த்தம். மேற்கு பார்த்த சந்நிதி. ஆரண்ய முனிவர் வழிபட்டு பூஜித்ததால் ஆரண்யேஸ்வரர் என்று பெயர் கொண்டார்.
ஸ்வாமிக்கு இடப்பக்கமாக தெற்கு பார்த்து அம்பாள் அகிலாண்டேஸ்வரி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். ஸ்வாமி - அம்பாள் சந்நிதிகளை ஒருசேர தரிசிக்கும் வகையில் அமைந்துள்ளது.
விசேஷ மூர்த்தமான நண்டு பூஜித்த விநாயகர் அழகாக இருக்கின்றார். பீடத்தில் நண்டின் உருவம் காணலாம். மூஷிகம் இல்லை.
வழக்கமாக நான்கு சீடர்களுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி இங்கு ஆறு சீடர்களுடன் தரிசனம் தருகின்றார். இவரது சந்நிதிக்கு மேற்கில் கடல் அலை போன்ற ஒலி மதிற்சுவரில் தொடர்ந்து கேட்கப்படுகின்றது.
ஒரு அடி உயரமே உள்ள சிறிய வடிவ நடராஜர் கொள்ளை அழகு. சிவகாமி உடனாய நடராஜர் படிமங்கள் அற்புதமானவை. இரண்டு பாணங்களுடன் உள்ள ஒரே லிங்கம், தசலிங்கம், பிரம்மேசர், முனியீசர், சுப்ரமண்யர், பைரவர், சூரியன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.