1400 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில் எனக் கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியார் செம்பியன் மஹாதேவி திருப்பணிகளைச் செய்துள்ளார்.
வியாசர் இம்மலையை அளவு எடுத்துப் பார்த்ததில் நான்கு பாகங்களும் சரியாக இருந்ததால் சதுரகிரி எனப் பெயர் வைத்தார் எனக் கூறப்படுகிறது.
வாலிக்கு பயந்து சுக்ரீவன் ஒளிந்து கொண்டிருந்த ரிஷ்யமுக பர்வதம்தான் தற்போது கொல்லிமலை என அழைக்கப்படுவதாக கூறுவர். இம்மலையில் வாலி பஞ்ச லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டானாம். சீதையைப் பிரிந்த ராமர் இம்மலைக்கு வந்து ஹனுமனையும் சுக்ரீவனையும் சந்தித்து அவர்களின் நட்பைப் பெற்று, வாலியை வதம் செய்ததாக நயனாசல புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சநதியாற்று மீனை யாரும் பிடிப்பதில்லை. அதற்கு உணவு தருகின்றனர். மீனைப் பிடித்து அதற்கு மூக்கு குத்தி மகிழ்கின்றனர். ஒரு சமயம் ஒருவர் இங்குள்ள மீன்களைப் பிடித்து அறுத்து சமைக்கும் போது கொதிக்கின்ற குழம்பிலிருந்த மீன்கள் உயிர் கொண்டு தாவிக் குதித்து ஓடியதாம். அறுத்த மீனிலும் உயிரைப் பொருத்திய அறப்பளீஸ்வரர் என்பர்.
ஆடி பதினெட்டாம் பெருக்கின்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆடி 17, 18, 19 தினங்களில் ஓரி விழா அங்கவை - சங்கவை அரங்கில் நடக்கும். வாசலூர்பட்டி படகு சவாரி, மலைவாழ் மக்களான மழவர் - கொங்கர் ஆகியோருடன் நடனம் போன்றவைகள் சிறப்பாக நடக்கும்.
காகபுஜண்டர், மாணிக்க சித்தர் ஆகியோர் தவம் புரிந்த இடங்களைக் காணலாம். பற்பல சித்தர்கள் வாழ்ந்த பூமி.
கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரி ஆண்ட பிரதேசம். ஓரி எனும் சொல்லுக்கு ஒப்பற்றவன் எனப் பொருள். ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது ஒரு காட்டு யானையின் மீது அம்பை ஏவினான் ஓரி. இவனது வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு யானையைத் தாக்கி வீழ்த்தியதோடு அல்லாமல் சீறிச் சென்ற புலியையும் அதைக் கடந்து அருகே நின்ற மானையும் அடுத்து ஒரு பன்றியையும் சாய்த்துவிட்டு மரத்தில் ஊர்ந்து கொண்டிருந்த உடும்பையும் துளைத்தது என புறநானூறு விவரிக்கின்றது.
தேவார வைப்புத்தலம்.