திருமால் குறுகிய வடிவில் வாமனனாக தோன்றிய ஸ்தலம் என்பதால் திருக்குறுங்குடி எனப் பெயருற்றது. அவர் திரிவிக்ரமனாக ஆகாயத்தை அளக்கும்போது அவரது திருவடி சதங்கையிலிருந்து உருவானதே இங்குள்ள சிலம்பாறு என்பர்.
நம்மாழ்வாரின் தாய் தந்தையர் புத்ரபாக்யம் வேண்டி திருக்குறுங்குடி நம்பியை பிரார்த்தித்தனர். தாமே பிள்ளையாக பிறப்பதாக கூறிய அசரீரிப்படி நம்பியே நம்மாழ்வராக பிறந்தார் என்பது ஐதீகம்.
நம்பாடுவான் என்ற பக்தன் மலையடிவாரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். தினமும் அழகிய நம்பியை சேவித்து விட்டு மலை மீது சென்று மலை மேல் நம்பியை சேவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கைசிக பண்ணை இசைத்தவாறு மலை மீது செல்வது வழக்கம்.
ஒரு நாள் கைசிக பண்ணை இசைத்துக் கொண்டு மலை ஏறும்போது, திடீரென அவர் முன்பு தோன்றிய வேதாளம் உன்னை விழுங்கப் போகிறேன் என்றது. பெருமாளை சேவித்துவிட்டு திரும்ப வரும்போது உனக்கு உணவாகிறேன், இது சத்தியம் என்றார் நம்பாடுவான். வேதாளமும் வழி விட்டது.
மூலஸ்தானத்தில் நின்று கொண்டு கைகூப்பி எம்பெருமானை வணங்கும்போது கொடிமரம் குறுக்கே மறைத்து நின்றதால் தரிசனம் செய்ய முடியவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்ப சென்று வேதாளத்திற்கு உணவாக வேண்டும். பெருமாளை சேவிக்க முடியவில்லையே என வருந்தினார் நம்பாடுவான். கொடிமரம் இடம் பெயர்ந்து விலகி நின்றது. ஆசை தீர பெருமாளை சேவித்தார் பக்தர்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேதாளத்திடம் சென்ற நம்பாடுவான் தம்மை விழுங்குமாறு வேண்டினார். எம்பெருமான் கடாட்சத்தால் பசி அடங்கிப் போயிருந்த வேதாளம் தனக்கு பசி இல்லை எனக் கூறி அவரை விழுங்க மறுத்தது. அதற்கு நம்பாடுவான் தனது புண்யத்தை தாரை வார்த்து கொடுத்தான். வேதாளம் தனது கோர வடிவம் நீங்கி, தேவ வடிவம் பெற்றது. இந்த ஐதீகத்தை கைசிக ஏகாதசியன்று நடத்திக் காட்டுகின்றனர்.
திருமங்கை ஆழ்வார் தமது அந்திமக் காலத்தை இங்கே கழித்ததாக குருபரம்பரை வரலாறு கூறுகிறது.