யாகங்கள் நடத்தும்போது அக்னி பகவானைப் போற்றுகின்றவர்களே, நெருப்பினால் பொருட்கள் எரிந்து அழியும்போது தூற்றுகின்றனர். இந்தப் பழி பாவத்திலிருந்து விடுபட, இத்தலத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார் அக்னி தேவன். தாமே அக்னி ஸ்வரூபம் என்றும், நடக்கும் நன்மை தீமைகளுக்குத் தாமே காரணகர்த்தா என்றும் கூறி அவரை சமாதானப்படுத்துகிறார் சிவபெருமான்.
இப்பகுதியை ஆண்ட விக்ரம சோழனின் மனைவிக்கு உண்டான தோல் நோயைக் குணப்படுத்திய இறைவன் என்பதால் சோழீஸ்வரர் என்ற பெயரும், அக்னி ஸ்வரூபமாகவே எழுந்தருளியிருப்பதால் அக்னீஸ்வரர் என்ற பெயரும் கொண்டார்.
உஷ்ண சம்பந்தப்பட்ட நோயுற்றவர்களும், தீ விபத்திற்குள்ளானவர்களும், இவ்விறைவனை வழிபட்டு பூரண நலன் பெறுகின்றனர். தோல் நோயால் பாதிப்படைந்தவர்கள், ஸ்வாமிக்கு திராட்சை சாறு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். பாதாள சனீஸ்வரருக்கு, 12 நல்லெண்ணெய் தீபமேற்றி, 12 முறை வலம் வந்து, 12 நமஸ்காரங்கள் செய்தால் கஷ்டங்கள் யாவும் விலகும்.
வைகாசி பௌர்ணமி மற்றும் மாசி மக நாட்களில் சோழீஸ்வரரை தரிசிப்பது விசேஷ பலன்களைத் தரும் என அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
சுந்தரரின் பாடலை வைப்புத் தலமாகக் கொண்ட ஸ்தலம்.
தேவார வைப்புத்தலம்