அஹிந்திரன் என்பது ஆதிசேஷனின் பெயர்களில் ஒன்று. ஆதிசேஷன் தவம் புரிந்து பேறு பெற்ற ஸ்தலம் என்பதால் திருவஹிந்திரபுரம் எனப் பெயர் கொண்டது. திரு ஆகிய பூமியை வகிண்டு (பிளந்து) ஆதிசேஷனால் நீர் கொண்டு வரப்பட்டதால் திருவகிந்திரபுரம் என்றானதாகவும் கூறுவர்.
மகரிஷிகள் பலரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுந்தம் சென்றனர். திருவஹிந்திரபுரம் எனும் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் மார்க்கண்டேய மகரிஷி மற்றும் பூமா தேவிக்கு அருள் பாலிக்க சென்று விட்டார் விஷ்ணு என அறிந்து, மிகுந்த வருத்தம் கொண்டனர். பின்னர் திருவஹிந்திரபுரத்திற்கு விரைந்து வந்து, இங்கு தவம் புரிந்து கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து கொண்டு தாங்களும் தவமிருந்தனர்.
அவர்களுடைய தவத்தினால் மகிழ்ந்த விஷ்ணு, அவர்கள் விரும்பிய கோலத்தில் தேவநாதஸ்வாமியாக இங்கு சேவை சாதித்தார். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இங்கேயே கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு.
மார்க்கண்டேய முனிவரின் தவத்தின் பயனாக, திருமகள் இங்கு குழந்தையாக அவதரித்தாள். தரங்கமுக நந்தினி எனப் பெயர் கொண்டு வளர்ந்து வந்தாள். விஷ்ணு அவளை மணந்தார் என ஸ்தல வரலாறு.
திருமாலுக்குத் தேவைப்பட்ட தீர்த்தத்தைக் கொண்டு வர, கருடன் பறந்து சென்று வெகு நேரம் ஆகியும் தீர்த்தத்துடன் வரவில்லை. ஆதிசேஷன் தனது வாலால் பூமியை அடித்து பிளந்து, தீர்த்தம் ஒன்றை உண்டாக்கினார். அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர். இது தற்போது கிணறாக கோவிலுக்குள் உள்ளது.
பாதாள லோகத்திலிருந்து விரஜை எனும் தீர்த்தத்தை கருடன் கொண்டு வந்தார். அதுவே தற்போது கெடில நதி எனப்படுகிறது. சேஷ தீர்த்தம் நைவேத்யம் செய்யவும், கருட தீர்த்தம் திருமஞ்சனத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.
கெடில நதி இங்கு தெற்கு வடக்காக ஓடுவதால் உத்தரவாகினி என்பார்கள்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.