முசுகுந்தன், திருவாரூரிலிருந்து திருநள்ளாற்றுக்கு விடங்கரை எடுத்துச் செல்லும் வழியில், இத்தலத்தில் வைத்து சிலகாலம் பூஜித்தான். பின்னர் திருநள்ளாறு எடுத்துச் சென்றான். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், பின்நாளில் இங்கு தியாகேசருக்கு சந்நிதி அமைக்கப்பட்டு, செண்பகதியாகர் என பெயர் சூட்டி வழிபட்டு வருகின்றனர்.
பஞ்சவடியிலிருந்து சீதையை சிறை எடுத்து ஆகாய மார்க்கமாக போய்க் கொண்டிருந்த ராவணாசுரனை வழி மறித்து போரிட்டான் ஜடாயு. போரின் இறுதியில், சிவபெருமானிடமிருந்து பெற்ற சந்திரகாசம் எனும் வாளால், ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினான் ராவணன். சிறகுகள் வீழ்ந்த இடத்தில் பெரிய குளம் ஒன்று தோன்றியது. அதுவே ஜடாயு தீர்த்தம்.
சிறகுகள் வெட்டப்பட்ட நிலையிலும் ஜடாயு, இக்குளத்தில் மூழ்கி எழுந்து, அருகே சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டான். சிவபெருமான் பிரத்யட்சமானதும், தான் உயிரோடிருக்க வேண்டுமென கோரினான். தனக்கு பிரத்யட்சமான இங்கேயே கோயில் கொண்டு, வழிபடுவோர்க்கு நற்பலன்கள் வழங்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தான்.
வெட்டப்பட்ட சிறகுகள் வளர்ந்தன. உடல் வலிமையையும் பெற்றான் ஜடாயு. சிவஸ்தலங்கள் பலவற்றை வழிபட்டு, இறுதியில் புள்ளிருக்கு வேளூரில் (வைத்தீஸ்வரன் கோயிலில்) சிவசாயுஜ்யம் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.