மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியிருக்கும் கந்தஸ்வாமி பெருமான் தேவியர்கள் சகிதமாக கிழக்கு பார்த்து எழுந்தருளி தரிசனம் தருகின்றார். சுயம்புவாகத் தோன்றியவர். மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகுச் சட்டம் சாத்துவார்கள். கவசம் சாத்தி ஆடை ஆபரணங்கள் அணிவிப்பார்கள்.
கீழே கூர்ம பீடத்தில் ஷடாக்சர யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். ஸ்ரீ சக்கரம் மற்றும் தீர்த்த சக்கரம் கொண்டுள்ளது. இதில் முருகப் பெருமானின் 300 திருநாமங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பீடத்தில் முருகப் பெருமானை தேவியர்களுடன் சிலை வடிவில் எழுந்தருளப் பண்ணியிருக்கிறார்கள். அபிஷேக ஆராதனை மற்றும் அலங்காரங்கள் ஆகியவை இச்சிலை மூர்த்திகளுக்கு உண்டு. முருகனுக்கு பூஜை முடித்தபின் ஸ்ரீ சக்கரத்திற்கும் நடக்கும்.
அங்காரகனின் அதிபதி என்பதால் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், ஸ்ரீ சக்கரத்திற்கு திரிசதி அர்ச்சனை செய்கின்றனர்.
முருகன் சந்நிதி கோஷ்டத்தில் பிரம்மா இருக்க வேண்டிய இடத்தில், பிரம்ம சாஸ்தாவாக முருகனே இருக்கின்றார். ஜபமாலை, கமண்டலம், அபய-வரத ஹஸ்தங்கள் கொண்டுள்ளார்.
பிரகார வலச்சுற்றில் நாம் காணும் உபதேச முருகனின் எழில் வடிவம் நமது கண்களையும் மனசையும் விட்டு அகலாது. சிவபெருமானின் மடியில் அவர் முகத்தை நோக்கியபடி முருகன் அமர்ந்திருக்க, தந்தை வாய் புதைத்து, பிரணவ உபதேசம் பெறும் காட்சியை, செப்பு சிலையாக வடித்துள்ளனர். ஸ்வாமி மலையில் காணக் கிடைக்காத காட்சி.
யானை வாகனத்துடன் காணப்படும் உற்சவ மூர்த்தி.
வலது காலை மயில் மீது ஊன்றி, வில்லுடனும் வேலுடனும் காட்சி தரும் சம்ஹார முத்துக்குமாரர், அகஸ்தியருக்கு தமிழ் உபதேசிக்கும் குமரன் போன்ற பல செப்புச் சிலைகளைக் காணலாம்.
ஞான நடம் புரியும் ஆடவல்லான் ஆட்டு வாகனத்துடன் மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.
சந்நிதி சுற்றுச் சுவரில், ஒரு கையில் சேவலுடன் காட்சி தரும் குக்குடாப்தஜர் வித்தியாசமான அழகுடன் காணப்படுகின்றார்.
பிரகாரத்து வெளியே தெய்வயானை சந்நிதி தெற்கு நோக்கி இருக்கிறது.
சிவலிங்க வடிவினராக வான்மீகநாதரும் அம்பாள் புண்ணியகாரணியும் பிரகாரத்தில் சந்நிதி கொண்டுள்ளனர். தீபாவளிக்கு அடுத்த தினம் அம்பாள் சந்நிதியில் கேதார கௌரி விசேஷ பூஜைகள் நடக்கும்.
கணபதி, தண்டாயுதபாணி, வீரபத்ரர், வீரபாகு, நாகங்கள், அகஸ்தியர் ஆகிய சந்நிதிகளை தரிசிக்கலாம். அஸ்திரத் தேவர், த்வனி சண்டேசர், மாத்ரு கண்டேசர், இந்திரன் ஆகிய பஞ்சலோக விக்ரஹங்கள் கொள்ளை அழகுடன் காணப்படுகின்றன.
தூண் ஒன்றில் உள்ள வள்ளி கல்யாணசுந்தரரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என நம்பிக்கை. தெற்கு வாசல் வழியே போனால் வள்ளியம்மை சந்நிதியையும் உற்சவ முருகனையும் தரிசிக்கலாம்.
ஓம்கார அமைப்பிலுள்ள கோவில்.