காளையார் கோவில் பகுதியை ஆண்ட வீரபாண்டியன் எனும் அரசன், காளீசரின் அருளால் ராட்சஸகட்கம் எனும் வாளைப் பெற்றிருந்தான். ஒரு நாள் அரசன் வேட்டையாடச் சென்றபோது, ஒரு மானைப் பின்தொடர்ந்து செல்கையில், தனது பரிவாரங்களிலிருந்து விடுபட்டு தனியாளானான். தனது வாள் எங்கோ விழுந்தது கூடத் தெரியாமல் தொடர்ந்தான்.
மான் தப்பிச் சென்றுவிட்டதை உணர்ந்து, பின்தொடர்வதை விடுத்து, அங்குள்ள மது புஷ்கரிணியில் நீராடி, பின்னர் அங்குள்ள மரத்தடியில் படுத்து உறங்கினான். உறக்கம் கலையும்படி ஒரு பெரிய சப்தம் கேட்கவே, விழித்தெழுந்து பார்த்ததில், ஒரு தவசி மீது வேங்கை ஒன்று பாய்வதைக் கண்டான். வாளை இழந்துவிட்டதை உணர்ந்தபோதிலும், நிராயுதபாணியான அவன் தன்னுயிரையும் பொருட்படுத்தாது புலி மீது பாய்ந்து தவசியைக் காப்பாற்ற முற்பட்டான்.
புலியும் தவசியும் திடீரென மறைந்தனர். இது அரனாரின் திருவிளையாடல் எனப் புரிந்துகொண்ட அரசன் வாளைத் தேட முற்பட்டான். வன்னி மரத்தடியில் ஒரு அழகிய லிங்கமும் அதனருகே தனது வாளும் இருக்கக் கண்டான். அந்த லிங்கத்தைப் பூஜித்து கோவில் ஒன்றையும் எழுப்பினான். கொற்றவன் என்றால் அரசன் - கொற்றவனின் வாள் திரும்பத் தந்த இறைவன் என்பதால்கொற்றவாளீஸ்வரர் எனும் பெயர் கொண்டார்.
மூவருக்கும் முதல்வனான பரம்பொருளைத் தேடி மதுப்ரியர் எனும் முனிவர் கடுந்தவம் மேற்கொண்டார். அவருக்கு திரிபுவனேஸ்வரராகக் காட்சி தந்தார் இறைவன். ஜைமினி முனிவர் இவ்விறைவனை வழிபட்டு கார்யசித்தி அடைந்தார்.
இத்தலத்தின் ஸ்தல புராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் பாடப் பெற்றது.