ஸ்தல வரலாறு: பன்னிரெண்டாவது ருத்ராட்சம் விழுந்த இத்தலத்தின் கோவிலை, வியாக்ரபாதர் ஸ்தாபித்ததாக கூறப்படுகிறது. சிவாலய ஓட்டத்தின் கடைசி (12வது) ஸ்தலமான இங்கு, பயணத்தின் இறுதியாக வரும் பக்தர்களுக்கு ஹரியும் சிவனும் ஒன்றே என சங்கரநாராயணராக இறைவன் காட்சி தருகிறார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
புராண வரலாறு: விஷ்ணுவை பிடிக்காத புருஷா மிருகத்திற்கும், புஜ பலமே சிறந்தது என நம்பும் பீமனுக்கும், ஹரியும் - சிவனும் ஒன்றே என்பதை உணர்த்த கிருஷ்ணர் ஒரு திட்டம் வகுத்தார். ராஜசூய யாகம் நடத்த முற்பட்ட தர்மர், யாகத்திற்காக புருஷா மிருகத்தின் பாலைக் கொண்டு வரும்படி பீமனைப் பணித்தார். வைணவத்தை வெறுக்கும் அதனிடம் பாலை எப்படி பெறுவது என யோசித்தான் பீமன். புருஷா மிருகத்தை ஏமாற்றும் திட்டத்தை, ஸ்ரீ கிருஷ்ணர், பீமனுக்கு சொல்லித் தந்து, பன்னிரெண்டு ருத்ராட்சங்களையும் கொடுத்தார். புருஷா மிருகம் தவம் செய்து கொண்டிருந்த ஊரான திருமலை எனும் ஊரின் எல்லைக்கு சென்ற பீமன், 'கோவிந்தா... கோபாலா' என உரக்க கூவினான். தவம் கலைந்து கோபம் கொண்ட புருஷா மிருகம் பீமனை ஓட ஓட துரத்தலாயிற்று. புருஷா மிருகம் பீமனை பிடிக்க நெருங்கும் சமயம், பீமன் தன் கையிலிருந்த ருத்ராட்சங்களில் ஒன்றை கீழே போட்டான். உடனே அந்த ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. துரத்தி வந்த புருஷா மிருகம் சிவலிங்கத்தைக் கண்டதும் சுற்றி வந்து பூஜை செய்ய ஆரம்பித்தது. இப்படியே மற்ற 11 ஊர்கள் வரை புருஷா மிருகம் துரத்துவதும், பீமன் ஓடுவதுமாக தொடர்ந்தது. பீமன் ஒவ்வொரு ருத்ராட்சமாக கீழே போடுவதும், அது லிங்க வடிவம் பெறுவதும், துரத்தி வந்த புருஷா மிருகம் பூஜை செய்வதும் தொடர்ந்தது. 12வது ஊரான திரு நட்டாலத்தில் ருத்ராட்சத்தை கீழே போட்டு முளைத்த லிங்கத்தை பூஜை செய்து முடித்த புருஷா மிருகம், பீமனைப் பிடித்து விட்டது. அப்போது பீமனின் ஒரு கால் புருஷா மிருகத்தின் எல்லைக்குள்ளும் (அதாவது திருநட்டால எல்லைப் பகுதி), மற்றொன்று அதை தாண்டியும் இருந்தன. எல்லையை தாண்டி விட்டதால் தன்னை விட்டு விடும்படி பீமன் கேட்க, புருஷா மிருகம் மறுக்க, அங்கு வந்த தர்மரிடம் இருவரும் நியாயம் கேட்கின்றனர். 'தம்பி' என்று பாரபட்சம் பாராமல், எல்லைக்குள் ஒரு கால் இருப்பதால் பீமனின் பாதி உடல் புருஷா மிருகத்திற்கே சொந்தம் என தீர்ப்புக் கூறினார் தர்மர். தீர்ப்பு நியாயமாக இருந்ததால் மகிழ்ந்த புருஷா மிருகம் தர்மர் நடத்தும் ராஜசூய யாகத்திற்கு உதவ சம்மதித்தது. பீமனையும் விடுவித்தது. இந்த சமயத்தில் அங்கு வந்த ஸ்ரீ கிருஷ்ணர், ஹரியும் - சிவனும் ஒன்றே என பீமனுக்கும் - புருஷா மிருகத்திற்கும் உணர்த்தினார். பீமன் கீழே போட்ட ருத்ராட்சங்களிலிருந்து முளைத்த சிவலிங்கங்களையே 12 சிவாலயங்களிலும் காணலாம். இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தவே வருடந்தோறும் சிவராத்திரியன்று பக்தர்கள் சிவாலய ஓட்டமாக ஓடி 12 மஹாதேவர்களை தரிசனம் செய்கின்றனர். சிவாலய ஓட்டத்தில் பன்னிரெண்டாவது கோவில் இது.