மகிஷாசுரனை வதம் செய்வதற்காக கோர உருவம் கொண்டு வந்த துர்க்கை அவனை சம்ஹாரம் செய்த பின் மீண்டும் பழையபடி அழகான உருவம் பெற வேண்டி இவ்விறைவனை பிரார்த்தித்தாள்.
ஒரு மண்டலம் இங்குள்ள பொய்கையில் நீராடி மார்க்கசகாயேஸ்வரரை வழிபட்ட துர்க்கை, தன் கோர உருவத்திலிருந்து விடுபட்டு சௌந்தர நாயகியானாள். இத்தலத்திலேயே தன்னை மணந்து கொள்ள வேண்டும் என சௌந்தர நாயகி கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவளை மணம் செய்து கொள்கிறார்.
திருவதிகை எனும் ஊரில், வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகிய முப்புராதி அசுரர்களை அழிக்க சிவனார் அம்பு தொடுக்கும் வேளையில், தாங்கள் ஆயுதங்களாக இருந்து உதவுவதால்தான், அசுரர்களை அழிக்க சிவபெருமானால் முடிகிறது என்ற கர்வமான எண்ணம், பிரம்மா-விஷ்ணு மற்றும் தேவாதி தேவர்களுக்கு தோன்றியது.
இதை உணர்ந்த சிவனார், ஆயுதங்களை பயன்படுத்தாமல் நெற்றிக்கண் கொண்டு அசுரர்களை எரித்தார். சிவநிந்தனை செய்த பாவத்திற்கு ஆளான பிரம்மா-விஷ்ணு ஆகியோர் பிராயச்சித்தம் வேண்டி நின்றனர். காவிரிக்கரையில் இருக்கும் புன்னாகவனம் சென்று அங்குள்ள சுயம்பு லிங்கத்தை வழிபடுமாறு பணித்தார்.
பிரம்மா விஷ்ணு இருவரும் இத்தலத்தை அடைந்து சுயம்பு லிங்கத்தை தேடினர். ருத்ர மூர்த்தியாக அங்கு வந்த சிவபெருமான் மரத்தடியிலுள்ள தழைகளை விலக்கி அவர்களுக்கு சுயம்பு லிங்கத்தை காண்பித்தார். உடனே பிரம்மாவும் விஷ்ணுவும் தாங்களே லிங்கத்தை பூஜித்து வழி காட்டுங்கள் என்றனர். ருத்ரரும் மலர்களால் அர்ச்சித்து லிங்கத்தை பூஜித்தார். அதைத் தொடர்ந்து பிரம்மாவும் விஷ்ணுவும் லிங்கத்தை பூஜை செய்தனர். சப்த மாதர்களும் வழிபட்டுள்ளனர்.
பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் வழிபட்டதால் மூவரூர் என அழைக்கப்பட்டு, தற்போது மூவலூர் என்றானது. அத்தலத்தை சுட்டிக் காட்டியதாலும், பூஜை செய்யும் வழிமுறைகளைக் காட்டியதாலும் வழி காட்டும் வள்ளல் என்ற பெயர் வந்தது.
(மயிலாடுதுறையின் கிழக்கே உள்ள விளநகரில் - துறை காட்டும் வள்ளல், மேற்கே உள்ள மூவலூரில் - வழி காட்டும் வள்ளல், தெற்கில் பெருஞ்சேரியில் - வாக்கு வள்ளல், உத்திர மாயூரத்தின் கை காட்டும் வள்ளல்).
திருவாவடுதுறை ஆதீன சமயக்குரவர் நமச்சிவாய மூர்த்திகளின் அவதார ஸ்தலம்.
தேவார வைப்புத்தலம்.