சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான் ராவணன். பிரத்யட்சமான சிவபெருமானிடம், பல கோடி ஆண்டுகளுக்கு ஆயுளும், ஒரு மந்திர வாளும் வரமாகப் பெற்று, ரதம் ஒன்றில் ஏறி, உமையவளையும் இலங்கைக்கு எடுத்துச் செல்ல முற்பட்டான்.
இந்த வரங்களை குறைக்கும் தீர்மானத்தில், குதிரை வடிவம் கொண்டு மேய்ந்து கொண்டிருந்தார் மகாவிஷ்ணு. ராவணன் ஓட்டிச் சென்ற ரதம் தடைப்பட்டு நின்றது.
வயதான பெரியவர் ஒருவர், துளசி செடியை தலைகீழாக நட்டு, ஓட்டைக் குடம் கொண்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்ட ராவணன், "தப்பு தப்பாக செய்கிறாயே? உனது விசித்திரமான செய்கையை நிறுத்து" என்றான். பெரியவராக தோற்றம் கொண்டு வேடமணிந்த திருமால், "நீ மூணரைக்கோடி ஆயுள் பெற்றது சரியா? மீதமுள்ள அரைக்கோடி ஆயுளையும் பெற்று வா, சரியாகிவிடும்" என்றார்.
ரதத்தை அங்கேயே நிறுத்தி விட்டு, மீண்டும் தவம் செய்ய போனான் ராவணன். உடனே ரதத்தில் இருந்த உமையவளை மீட்டு, விபூதிக் கோட்டைக்குள் ஒளித்து வைத்தார் திருமால்.
ராவணனது எண்ணம் முழுவதும் மீதமுள்ள அரைக்கோடி பெறுவதிலேயே இருந்ததால், ஏற்கனவே பெற்ற மூணரைக்கோடியை மறந்து, அரைக்கோடி ஆயுள் வேண்டும் என வேண்டினான். அதன்படி அரைக்கோடி ஆயுளே வரமாக பெற்றான்.
திரும்பி வந்து பார்த்தால் துளசி செடிகள் நேராக இருந்தன. ரதத்தில் இருந்த உமையவளையும் காணவில்லை. மந்திர வாளும் இருக்கவில்லை. ராவணன் பெற்ற வரம் வெறும் அரைக்கோடி மட்டுமே என்பதை சுட்டிக் காட்டி விட்டு பெரியவர் மறைந்தார்.
மேற்கண்ட ஸ்தல வரலாறு நந்தி தேவரால் சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கப்பட்டு, முனிவர்களால் மகாராஜாவுக்கு எடுத்து சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
வரங்கள் குறைக்கப்பட்டதால் 'வரம்-சரம்' என்று பெயர் கொண்டது இத்தலம்.