சிவபெருமானை மதியாது, அவரை அழைக்காது தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட காமதேனு பசுவை காட்டு பசுவாகவும், யாகத்தில் கலந்து கொண்ட கற்பகத் தருவை முட்புலா மரமாகவும் உரு மாறும்படி சபித்து விடுகிறார் வீரபத்ரர்.
முட்புலா மரமாக மாறிய கற்பகத்தரு தன்னை சுற்றிலும் பல புலா மரங்களை வளர்த்துக் கொண்டு, அங்கு சுயம்புவாக எழுந்தருளியிருந்த லிங்கத்திற்கு நிழல் தந்தது.
இப்பகுதியை ஆண்ட ராஜசிம்ம பாண்டியனின் உபயோகத்திற்கு தினமும் ஒரு குடம் பாலை, இவ்வழியே எடுத்துச் செல்லும் இடையனின் கால் புலாமர வேரில் இடறி பால் கொட்டி விட்டது. கோபம் கொண்ட இடையன் புலா மரத்து வேரை அரிவாள் கொண்டு வெட்டினான். வேரினடியில் புதையுண்டிருந்த சிவலிங்கத்தின் மீது அரிவாள் பட்டதால் லிங்கத்திலிருந்து ரத்தம் பெருகியது. அதே நேரத்தில் புலா மரமாக நின்ற கற்பகத்தரு சாப விமோசனம் பெற்று விண்ணுலகை அடைந்தது.
விபரங்களை கேட்டறிந்த மன்னன், அங்கு விரைந்து சென்று சிவஅபராதம் செய்த இடையனுக்காக மன்னிப்பு கோரி வருந்தி, சிவபெருமானை மனமார துதித்தான். வானளாவ உயர்ந்து நின்று ஜோதிப் பிழம்பாக காட்சி தந்தார் இறைவன். பாண்டியன் வேண்டிக் கொண்டதன் பேரில் சிறிய உருவமாக தோன்றி அளவுக்களவானவர் என்ற பெயரைக் கொண்டார். பாண்டியன் ஆலிங்கனம் செய்து கொண்டபோது மார்புகவசமும் முத்து மாலையும் பதிந்ததால் தழுவக் குழைந்த நாதர் என்ற பெயரையும் கொண்டார். புலான் புதர்களிடையே தோன்றியதால் ஸ்வாமிக்கு புலாநந்தீஸ்வரர் எனும் திருநாமம்.
காசியிலுள்ள அந்தணன் ஒருவனால் சபிக்கப்பட்டு புலியாக மாறிய கந்தர்வன் ஒருவன் இவ்வனத்தில் திரிந்து கொண்டிருந்தான். சாபத்தினால் காட்டுப்பசுவாக மாறிய காமதேனு அங்கு மேய்ந்து கொண்டு இருந்தது. அந்த பசுவை கொன்று உண்ணப் போவதாக கூறியது புலி. கன்றுக்குட்டிக்கு பாலூட்டி விட்டு திரும்பி வருவதாக வாக்களித்துவிட்டு சென்ற பசு, பாலூட்டி முடித்த பின், சிவநாமங்களைக் கூறிக் கொண்டே புலியிடம் வந்து சரணடைந்தது.
இடைப்பட்ட நேரத்தில் மனம் மாறி சாத்வீக குணம் கொண்ட புலி, பசுவை உண்ண மறுத்தது. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியவில்லையே என வருந்திய பசு, கற்பாறையில் மோதி உயிரை விட்டது. பசுவின் மரணத்திற்கு காரணமாகி விட்டோமே என வருந்திய புலி அதே போன்று செய்து உயிரை மாய்த்துக் கொண்டது. எதிரெதிரான குணங்களைக் கொண்ட இரு வேறு விலங்குகள் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக நடந்து கொண்ட இந்த நிகழ்வினால், காட்டுப்பசு சாப விமோசனம் பெற்று காமதேனுவாக மாறி விண்ணுலகம் சென்றது. புலி சாப விமோசனம் பெற்று கந்தர்வனாக மாறியது.
இங்குள்ள நாகலிங்கமரத்துப் பூவின் நடுவே ஒரு லிங்கத்தின் வடிவமும், அதை ஆதிசேஷன் குடை பிடிப்பது போன்றும் காணப்படுகிறது.