சிவபெருமானை அழைக்காமல் தட்சன் நடத்திய யாகத்திற்கு போக விரும்பிய தாட்சாயிணிக்கு (யாகத்தில் பங்குபெற) அனுமதி தரவில்லை. இருப்பினும், கணவனிடம் தர்க்கம் செய்ததால் கொண்ட தோஷத்தைப் போக்கிக் கொள்ள, இத்தலத்திற்கு வந்து, இங்குள்ள பாரிஜாத மரத்தடியில் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை பூஜித்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
அம்பாள் ஆடி மாதம் தபஸ் பண்ணிய இடம் தற்போது ஆடி தபஸ் மண்டபமாக இருக்கின்றது.
மஹாவிஷ்ணு இவ்விறைவனை வழிபட்டு சக்கரம் பெற்றுள்ளார். சூரியன் லிங்கம் அமைத்து வழிபட்டு கிரகங்களுக்கு தலைமை ஏற்கும் பதவியைப் பெற்றான். பிரம்மா, பார்வதி, காளி ஆகியோர் வழிபட்டுள்ளனர். பிரம்மாவிற்காக பொய் சொன்ன தாழம்பூ தனது அவப்பெயரை போக்கிக் கொள்ள வழிபட்ட ஸ்தலம்.
விராட புருஷனின் முகமண்டலமே திருப்புவனம் எனக் கூறுவர்.
ருத்ர கணிகையர் குலத்துப் பெண் பொன்னணையாள் என்பவள் இத்தலத்தில் வாழ்ந்து, சிவத்தொண்டு செய்து கொண்டிருந்தாள். சிவனடியார்களுக்கு அமுது படைப்பதை வழக்கமாகக் கொண்டவள்.
இத்தலத்து இறைவன் பூவணநாதரை பொன்னால் வார்க்கும் ஆசை கொண்டிருந்தாள். திருவிளையாடல் புரிவதில் வல்லவரான சித்தர் வேடம் பூண்டு, அவளது வீட்டிற்கு சென்றார். வீட்டிலுள்ள இரும்பு பொருட்களைக் கொண்டு வரும்படி பணித்தார். சித்தரின் ரசவாத சித்து வேலையில் இரும்பு பொருட்கள் எல்லாம் பொற்குழம்பாகி, அழகிய பூவணநாதர் சிலை ஒன்று உருவானது. சிலை முற்றுப் பெற்றதும் அதன் அழகில் மயங்கிய பொன்னணையாள் கன்னத்தை கிள்ளி மகிழ்ந்து முத்தமிட்டாள்.
முத்தமிட்ட தழும்பும், நகக் குறியும் உற்சவத் திருமேனியில் காணலாம்.
ஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வரும்போது மணலெல்லாம் சிவலிங்கங்களாக காட்சி தந்தன. ஆற்றின் கரையிலேயே நின்று கொண்டு தவித்த சம்பந்தருக்காக, நந்தியை சற்று விலகியிருக்குமாறு பணித்து சம்பந்தருக்கு தரிசனம் தந்தார் இறைவன்.
இதனால் இத்தலத்து நந்தி சாய்ந்தே உள்ளது. இன்றளவும் ஆற்றின் வடகரையிலுள்ள ஆடித் தபஸ் மண்டபத்தில் நின்று கொண்டு தென் கரையிலுள்ள லிங்கத்தை வழிபடலாம்.
இங்குள்ள மணிகன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, கரையில் அமர்ந்து பிதிர்சிரார்த்தம் கொடுத்து, சூரியலிங்கத்தை வழிபட்டால், காலனை காணமாட்டார் என்று கூறுகிறார்கள். (தற்போது அம்மன் கோவில் எதிரேயுள்ள கிணறு). இதில் மூழ்கி ஸ்நானம் செய்து இவ்விறைவனை வழிபட்ட அகஸ்தியர் சமுத்திரத்தை குடிக்கும் வல்லமை பெற்றதாக கூறப்படுகிறது.
தர்மயக்ஞன் என்பவன் தந்தையின் அஸ்தியுடன் சேதுக்கரைக்கு புறப்பட்டான். போகும் வழியில் இந்த ஸ்தலத்தைக் கடக்கும்போது, கொண்டு போகும் அஸ்தி அனைத்தும் மலர்களாக மாறின. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்தலத்தை - இறந்தவர்களுக்கு முக்தி தரும் ஸ்தலமாக கருதி மோட்ச தீபம் ஏற்றுகின்றனர். கோரக்க சித்தரின் ஜீவ சமாதியும் இருக்கிறது.
ஞானசம்பந்தரிடம் வாதிட்டு தோற்ற சமணர்கள் கழுவேறிய இடமே திருப்புவணம் எனக் குறிப்பொன்று கூறுகிறது. இங்கு வைகையாறு வடக்கு நோக்கி பாய்ந்து ஓடுகிறது.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.