ஆதியில் இவ்வூருக்கு நல்லூர் என்ற பெயர் இருந்தது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூவகை சிறப்புகளை உடைய ஸ்தலம் என்பதால் நல்லூர் எனப் பெயரிட்டனர். ஞானசம்பந்தரின் திருமணம் நடந்ததினால் பெருமணநல்லூர் எனப் பெயர் பெற்றது. ஆச்சாள் எனப் போற்றப்படும் வெண்ணீற்று உமையம்மை குடி கொண்ட இடம் என்பதால் ஆச்சாள்புரம் என்றானது.
வசிஷ்டர், பராசரர், பிருகு, துர்வாசர், அத்ரி, ஜமதக்னி, விஸ்வாமித்திரர் ஆகிய ரிஷிகள், சிவலோகம் காண ஆசை கொண்டு தவம் இருந்தனர். அவர்களை நல்லூருக்கு வரும்படி ஆக்ஞாபித்தார் இறைவன்.
நல்லூருக்கு வந்த ரிஷிகள் இங்குள்ள பஞ்சாட்சர தீர்த்தத்தில் மூழ்கி ஆலயத்துள் சென்றனர். அவர்கள் வேண்டியபடி சிவலோக காட்சியைக் காட்டி, பின்னர் அக்காட்சியை மறைத்து, பழைய நிலையில் எழுந்தருளினார் என ஸ்தல வரலாறு. இதனால் சிவலோக தியாகேசர் என்ற திருநாமம் கொண்டார்.
சீர்காழியைச் சேர்ந்த சிவபாத ஹிருதயரின் மகனான ஞானசம்பந்தர், உமையம்மையிடம் ஞானப்பால் அருந்திய பாலகன்.
16-வது வயதில் ஞானசம்பந்தனுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்டார் அவனது அப்பா. திருமணத்தில் நாட்டமில்லாத ஞானசம்பந்தன், அதற்கு சம்மதிக்கவில்லை. அந்தணராகப் பிறந்ததாலும், வேதங்களை தழைக்கச் செய்யக் கங்கணம் கட்டிக் கொண்டதாலும், வேள்விகள் செய்யவேண்டுமெனில், மணம் புரிந்திருக்க வேண்டும் என்ற மரபு இருப்பதாலும், தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு சம்மதித்தார்.
நல்லூரில் வசித்த நம்பியாண்டார் நம்பியின் மகளான ஸ்தோத்ர பூரணாம்பிகாவை, தாரண ஆண்டு வைகாசி மாதம் மூல நட்சத்திரம், வியாழக்கிழமையன்று தனுர் லக்னத்தில், மணமுடிப்பதாக நிச்சயித்தனர்.
கல்யாணக் களை கட்டியது. எங்கு பார்த்தாலும் திருநீற்றின் ஒளியும், பஞ்சாட்சர மந்திர கோஷங்களும் துலங்க ஊரே கோலாகலமானது. ஞானசம்பந்தரின் தோழரான திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருமணத்தை நடத்தி வைக்க வந்த திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார் ஆகியோர் ஏதோ அதிசய நிகழ்வு நடக்கவிருப்பதை உணர்ந்தவர்களாக காத்திருந்தனர். இரு தரப்பு உற்றார் உறவினர்களும் ஆவலுடன் கூடியிருந்தனர்.
திருமணமும் அதற்கடுத்த சடங்குகளும் நடந்து கொண்டிருந்தன. மணமகளின் கரம் பற்றி அக்னியை வலம் வந்த ஞானசம்பந்தர், கண்ணீர் மல்கப் பார்த்து இனி எனக்கு விடுதலை தாருங்கள் எனக் கோரி காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி எனும் பதிகத்தைப் பாடுகின்றார்.
அப்போது பெரும் ஜோதி ஒன்று தோன்றியது. சம்பந்தா உன் மனைவி மற்றும் வந்திருக்கும் புண்ய சீலர்களுடன் இந்த ஜோதிக்குள் புகுந்து விடு என அசரீரி ஒலித்தது. அனைவரும், பிறப்பறுக்கும் ஞானத்தீயில் புகுந்தனர். ஒரே சமயத்தில் நான்கு நாயன்மார்களும் முக்தி பெற்றனர்.
ஞானப்பிழம்பில் ஒரு வாசலமைத்து அதில் அமர்ந்த அம்பாள், தீயின் உட்புகுவோரின் நெற்றியில் திருநீறு பூசினாள். இதனால் திருவெண்ணீற்று உமையம்மை என்கின்றனர். அனைவர்க்கும் பேதமின்றி வெண்ணீறு அளித்து ஜோதியில் புகுவித்ததால் ஆச்சாள் என்பர்.
அக்னி பிழம்பிற்கு பயந்து ஓடியவர்களை, நந்திதேவர் வழி மறித்து, தீயில் மூழ்கும்படி கூறி விரட்டினார்.
திருஞானசம்பந்தரின் கல்யாண உற்சவத்தை, வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில், பெருவிழாவாக கொண்டாடுகின்றனர். முதல் நாள் காலை உற்சவ மூர்த்தியான பால சம்பந்தருக்கு உபநயனம் செய்வார்கள். வடக்கு வீதியிலுள்ள ஒரு மடத்தில் இறக்கி வைப்பார்கள். அக்ரஹாரத்தின் வேறொரு மடத்தில் ஸ்தோத்திர பூரணாம்பிகை இருப்பார். அன்று மாலை சம்பந்தருக்கு மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். உற்சவ மூர்த்தியான கல்யாண சம்பந்தர் இடம் பெறுவார். திருக்கல்யாணமும் வைதீகச் சடங்குகளும் நடைபெறும்.
விடியற்காலை 4 மணியிலிருந்து கோவில் மூலவர்க்கு அபிஷேக ஆராதனை முடித்து, ஓதுவார்க்கு உபசாரங்கள் செய்வார்கள். ஓதுவார் காதலாகிக் கசிந்த கண்ணீர் மல்கி எனும் பாட்டையும் மற்ற பாடல்களையும் பாடிக் கொண்டு இருக்கையில், மூலஸ்தானத்துப் பஞ்சாட்சர படிகளில், கல்யாண சம்பந்தரையும் ஸ்தோத்திர பூரணாம்பிகையையும், ஒவ்வொரு படியாக ஏற்றி, கருவறைக்குள் சேர்த்து விடுவார்கள். ஜோதியில் கலந்து விட்டதாக ஐதீகம்.
மூலவர் எழுந்தருளியுள்ள கர்ப்பக்ரஹத்திற்குள், உற்சவ மூர்த்திகளைக் கொண்டு போவது வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத நடைமுறை. ஞானசம்பந்தர் ஜோதியில் கலந்ததை தெரியப்படுத்தும் ஐதீகமாக இந்த சம்ப்ரதாயம் இங்குள்ளது.
கோவிலின் எதிரேயுள்ள குளத்தில், ஸ்வாமி தனது திரிசூலத்தால் பஞ்சாட்சர மந்திரத்தை எழுதி உபதேசம் செய்ததால் குளத்திற்கு பஞ்சாட்சர தீர்த்தம் எனப் பெயர்.
கங்கா தேவி, முருகப் பெருமான், சப்த ரிஷிகள், காகபுஜண்டர் ஆகியோர் வழிபட்ட ஸ்தலம். ஸ்ரீ ஆஞ்சநேயர் இவ்விறைவனை வழிபட்டு, ஆங்கிரஸ மகரிஷி துணையுடன் ஹோமம் வளர்த்து அதன் பலன்களை பூலோகத்திற்கு அர்ப்பணித்தார் என்கிறது ஸ்தல வரலாறு.
தேவாரத்திருத்தலம்.