இவ்வூரில் புங்கமரங்கள் மிகுந்து காணப்பட்டதாலும், ஸ்தல விருட்சம் புங்கமரம் ஆனதாலும் இவ்வூரை திருப்புன்கூர் என்று அழைக்கின்றனர். திருநாளைப்போவார் கோவில் என்று பிரசித்தம்.
பிரம்ம தேவனுக்கு சிவலோக காட்சி தந்ததால் இவ்விறைவன் சிவலோகநாதர் எனும் திருநாமம் கொண்டார்.
சிவாலய தர்மம் கடைப்பிடிக்கும் நந்தனார், ஆலயத்துள் சென்று இறைவனை தரிசிக்க முடியாத நிலைமை. கோபுரத்திற்கு வெளியே நின்று கொண்டு, இறைவனை தரிசிக்க இயலுமா என எண்ணி ஏங்குவார். சிவபெருமானின் முன்னால் படுத்திருக்கும் பெரிய நந்தி தரிசனம் பெற முடியாமல் மறைத்தது. வழி மறைத்திருக்கிறதே மலை போல் மாடு படுத்திருக்கிறதே என மனம் வருந்திப் பாடினார்.
சற்றே விலகியிரும் பிள்ளாய் சந்நிதானம் மறைக்குதாம் என சிவனார் நந்திக்கு கட்டளையிட, நாக்கை உள்ளே இழுத்தவாறு இரண்டடி நகர்ந்தது நந்தி. மகிழ்ச்சி பெருக்கில் ஆனந்த கூத்தாடி இறைவனை தரிசித்தார் நந்தனார் என ஸ்தல வரலாறு.
ஆலயத்தை வலம் வந்து திருக்குளம் ஒன்றை வெட்டினார் நந்தனார். கூலியாள் வேடத்தில் வந்து நந்தனாருக்கு உதவியவர் பிள்ளையார். இவர் குளம் வெட்டிய பிள்ளையார் எனும் பெயரில் எழுந்தருளி அருள் புரிகின்றார்.
இவ்வூரில் நீண்ட நாட்களாக மழை பெய்யாமல் வறண்டு போயிருந்த பூமியை காப்பாற்றும்படி, சுந்தரரை வேண்டினான் மன்னன். கோவிலுக்கு 12 வேலி நிலம் தானமாக கொடுப்பதாக இருந்தால், மழையை வரவழைப்பதாக கூறிய சுந்தரரிடம், அவ்வாறே தருவதாக வாக்களித்தான் மன்னன். பதிகம் பாடி மழையை வரவழைத்து கோவிலுக்கு 12 வேலி பெற்று தந்தார் சுந்தரர்.
இடைவிடாது பெய்த மழையால் வெள்ளப் பெருக்கெடுத்து ஊரே மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. மழையை நிறுத்தக் கோரிய மன்னனிடமிருந்து, மேலும் 12 வேலி நிலம், கோவிலுக்கு வாங்கி தந்து, பதிகம் பாடி, இறைவனை வேண்டி, மழையை நிறுத்தினார் சுந்தரர் என ஸ்தல வரலாறு.
தேவாரத்திருத்தலம்