மேற்கு தொடர்ச்சி மலை, வெள்ளி மலை, முள்ளி மலை ஆகிய மூன்று மலைகளால் சூழப்பட்ட சிவசைலம் பார்க்க மிகவும் ரம்யமாக இருக்கும். அத்ரி மகரிஷி வழிபட்டு அவருக்கு சிவபெருமான் காட்சி அளித்த ஸ்தலம் இது. வண்டு வடிவம் கொண்டு பிருங்கி முனிவர் வழிபட்ட ஸ்தலம். இங்குள்ள வண்டுகளுக்கு சதை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அர்ச்சகர் தனக்கு பிரசாதமாகத் தந்த மாலையில் தலைமுடி இருக்கக் கண்ட அரசன் கோபம் கொண்டு அர்ச்சகரைத் தண்டிக்க முற்பட்டான். அர்ச்சகரைக் காப்பாற்ற விழைந்த இறைவன், அரசனைத் தடுத்து நிறுத்தி தனக்கே சடைமுடி இருப்பதாகக் காண்பித்து, அர்ச்சகரைத் தண்டனையிலிருந்து காப்பாற்றினார் என ஸ்தல புராணம் கூறுகின்றது. இதனால் இவ்விறைவனுக்கு சடைமுடிநாதர் எனப் பெயர்.
அத்ரி மகரிஷியின் மகளாகப் பிறந்த உமையவள், பரம கல்யாணி என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். பின்னர் இறைவனை இத்தலத்தில் மணந்து கொண்டாள் என ஸ்தல புராணம் மேலும் விவரிக்கின்றது. அம்பாளின் பிறந்த ஊர் கீழாம்பூர். புகுந்த ஊர் சிவசைலம்.
பங்குனி மாதம் 11 நாட்கள் விழா கொண்டாடுவார்கள். ஆழ்வார்குறிச்சி திருநாள் மண்டபத்தில் நடக்கும். 4ஆம் நாள் ரிஷப வாகனம். 7ஆம் நாள் இரவு 11 மணிக்கு நடராஜப் பெருமான் சிவசைலத்திலிருந்து கிளம்பி சப்பரத்தில் வருவார். ஆழ்வார்குறிச்சியில், சிவசைலநாதரும் - பரமகல்யாணியும் எதிர்கொண்டு வரவேற்பார்கள். நடராஜருக்கு காலையில் வெள்ளை புஷ்பங்களால் அலங்காரமும், மாலையில் பச்சை நிற புஷ்பங்களால் அலங்காரமும் செய்வார்கள்.
மறுநாள் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறும். பின்னர் கீழாம்பூர் புறப்படுவார்கள். கீழாம்பூர் எல்லையில் கூடி நிற்கும் ஊர் மக்கள் மேளதாளத்துடன் வரவேற்று அழைத்துச் செல்வார்கள். கீழாம்பூர் தெற்கு தெரு பெருமாள் கோவில் மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறும். சுவாமியும் அம்பாளும் பின்னர் ரிஷப வாகனத்தில் பவனி வருவார்கள்.
மூன்றாம் நாள் சுவாமியும் அம்பாளும் சிவசைலம் திரும்பும்போது ஊர் மக்கள் எல்லோரும் கண்ணீர் மல்க விடை கொடுப்பார்கள். பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு செல்லும் அம்பாளுக்கு வண்டி நிறைய சீதனப் பொருட்கள் கொடுத்து அனுப்புவார்கள். இதை வசந்த மண்டகப்படி விழா எனக் கூறுவார்கள்.
இங்குள்ள கடனா நதிக்கும், நந்தியம் பெருமானுக்கும் சமஷ்ட உபச்சாரம் செய்து, நைவேத்தியத்தை இந்த தீர்த்தத்தில் கரைப்பார்கள்.
தருமை ஆதீன 16வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிக ஞானசம்பந்தரின் அதிஷ்டானம் இங்கு உள்ளது.