ஸ்தல வரலாறு
அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களே சந்திரனின் மனைவிமார்கள் ஆவர். தட்சனின் மகள்களான 27 அழகு தாரகைகளை மணந்த சந்திரன், ரோஹிணியிடம் மட்டுமே மிகவும் அன்பாக நடந்துகொண்டு, மற்ற மனைவிகளைப் புறக்கணித்தான். இதனால் வெறுப்புற்ற மற்றைய சகோதரிகள் அப்பா தட்சனிடம் சென்று முறையிட்டனர்.
எந்த அழகினால் கர்வம் கொண்டு மனைவிகளைப் புறக்கணித்து ஆணவமாக இருந்தாயோ, அந்த அழகு உன்னை விட்டு மறையட்டும் என்று சந்திரனை சபித்து விட்டார் தட்சன். சாபம் கொண்டு பிறையாகத் தேய ஆரம்பித்தவன், சாப விமோசனம் வேண்டி சங்கரனைச் சரண் அடைந்தான்.
சோமன் எனப்படும் சந்திரன் இத்தலம் வந்து சிவலிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டுப் பூஜித்தான். பிரத்யட்சமான இறைவன் சந்திரனுக்குத் தேய்வதும் பின் வளர்வதுமான பொலிவைத் தந்தார். சோமன் வழிபட்டு மங்கலம் பெற்ற ஸ்தலம் என்பதால் சோம மங்கலம் எனப் பெயருற்று, பின்னர் நாளடைவில் மருவி சோமங்கலம் என்றானது.
இங்கு சந்திரன் பூஜை செய்ய ஆரம்பித்ததும், தட்சனின் சாபம் பேய் வடிவில் துரத்த ஆரம்பித்ததாம். நந்தி தேவர் பேயை விரட்டி அடித்தார் என்றும், இதனால் நந்தி கருவறை நோக்கி இல்லாமல், கிழக்கு நோக்கித் திரும்பியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
தனது சாபம் நீங்கப் பெற இங்கு சிவனை வழிபட்ட சந்திரன், தீர்த்தக் குளம் ஒன்றையும் அமைத்தான். 'வினை தீர்த்தான் குளம்' என்ற பெயரில் இவ்ஊரின் மேற்கிலுள்ளது. தற்போது 'தீத்தாங்குளம்' என்று அழைக்கின்றனர்.