ஸ்வாமியையும் அம்பிகையையும் சிரத்தையாக நாள்தோறும் பூஜித்து வந்தார் இவ்வாலயத்தைச் சேர்ந்த சிவாச்சார்யார்.
இறைவனருளால் அவருக்கு குழந்தை பிறந்தது. பாலசுபத்தன் என பெயரிட்டு வளர்த்து வந்தார். குழந்தை பருவத்தில் இருந்தே பாலசுபத்தன் பொள்ளாப் பிள்ளையாரிடம் மிகுந்த பக்தி கொண்டு அவருக்கு செய்யும் பூஜைகளை கவனித்து வரலானான்.
அவனது அன்றாட விளையாட்டே பிள்ளையார் மீது காய்ந்த இலைகளை போடுவதும், களிமண்ணால் லட்டு போல செய்து, ஸ்வாமி சாப்பிடுங்கள் என்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தான். விநாயகரும் அதை லட்டாக மாற்றி எடுத்துக் கொள்வார்.
ஒரு நாள் அர்ச்சகர் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால், பிள்ளையாருக்கு பூஜை செய்ய மகனை அனுப்பினார். பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் மாற்றி, பூஜைகளைச் செய்து மகிழ்ந்தான் சிறுவன். நைவைத்யமாக வைத்ததை பிள்ளையார் உண்ணாமலிருக்கவே, தான் ஏதோ குற்றம் செய்து விட்டதாக கருதி, கருங்கல்லில் மண்டையை மோதி உடைத்துக் கொள்ள முயன்றான்.
அவனுடைய செய்கையை தடுத்து நிறுத்திய பிள்ளையார், அவனுக்கு காட்சி தந்து, அவனளித்த நைவேத்யத்தை ஏற்றுக் கொண்டார். பிள்ளையாரிடம் நிஜமான பக்தி கொண்டிருந்த சிறுவனுக்கு பிள்ளையாரின் அனுக்ரஹம் தொடர்ந்து கிடைத்தது. நம்பியாண்டான் நம்பி என்ற பெயரும் கிடைத்தது.
திருமுறைகள் இருக்குமிடத்தை தேடியலைந்த நம்பியாண்டான் நம்பிக்கும், ராஜராஜ சோழனுக்கும் தில்லை நடராஜர் ஆலயத்தில் திருமுறைகள் இருப்பதாக, அசரீரியாக தெரியப்படுத்தியவர் இந்த விநாயகர் என்பதனால் இவரை திருமுறை காட்டிய விநாயகர் என்று போற்றுவார்கள்.
முத்கலரின் புதல்வரான புருசுண்டி முனிவரை அவமதித்ததால் சாபம் பெற்ற நாராயண முனிவர் நாரை வடிவம் கொண்டார். துர்வாச முனிவரால் சபிக்கப்பட்ட கந்தர்வன் நாரை வடிவம் கொண்டு அலைந்ததாகவும் கூறுவர்.
கங்கை நீரை தன் அலகுகளில் கொண்டு வந்து தினமும் இங்குள்ள சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து சாப விமோசனம் வேண்டி நிற்குமாம் நாரை. ஒரு நாள் கங்கை நீருடன் கிளம்பிய நாரை வானத்தில் வந்து கொண்டிருக்கும்போது, பெருமழையில் சிக்கி தன் சிறகுகளை இழந்தது.
(சிறகிழந்த நல்லூர் எனும் ஊர் 1 கி.மீ தூரத்தில் அருகாமையில் உள்ளது. இது ஒரு வைப்பு ஸ்தலம். இங்கு ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது.)
சிறகுகளை இழந்த நாரை, தவழ்ந்து வந்து இறைவனை பூஜித்தது. இதனால் மகிழ்ந்த இறைவன், காட்சி தந்து, சாப விமோசனமும் தந்தார் என ஸ்தல வரலாறு.
வைகாசி விசாகத்தன்று நாரை விக்ரஹத்தை மூலவரின் சந்நிதி முன்பாக கொண்டு வந்து முக்தி பெறும் நிகழ்வை ஐதீகமாக கொண்டாடுகின்றனர்.
தேவாரத்திருத்தலம் - விநாயகரின் ஆறு படை வீடுகளில் ஒன்று - (முதலாம் படைவீடு)