பாளையாற்றின் கரையிலுள்ளது தெரிசனங்கோப்பு எனும் ஊர். ஆதி ராமேஸ்வரம் எனப் போற்றப்படும் ஸ்தலம்.
இங்குள்ள தாடகை மலை - அரக்கி தாடகையே தலைவிரி கோலமாய் படுத்திருப்பது போல இருக்கும்.
முனிபுங்கர்கள் மேற்கொள்ளும் வேள்விகளை சீர்குலைப்பதையும் அவர்களை துன்புறுத்துவதையும் அன்றாட செயல்களாக கொண்டிருந்தாள் தாடகை எனும் அரக்கி. தாம் மேற்கொள்ளவிருக்கும் தவம் ஒருங்கே நடைபெற, துணைக்கு ராம - லக்ஷ்மணர்களை அழைத்து செல்கிறார் விஸ்வாமித்ரர். வனத்தில் எதிர்பட்ட தாடகை ராம - லக்ஷ்மணர்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தாள். ராமன் செலுத்திய மூன்று அம்புகள் ஒன்றோடொன்றாக சரம் கோர்த்தபடி சென்று தாடகையை அழித்தன.
இதனால் திரு - சரம் - கோப்பு எனப் பெயருற்று பின்னர் மருவி தெரிசனங்கோப்பு என்றானது.
தாடகையை வதம் செய்த தோஷம் நீங்கிட ஸ்ரீ ராமபிரான் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கமே ஸ்ரீ ராகவேஸ்வரர் எனப் பெயர் பெற்றது.