6000 கடந்தையர்கள் (வீர மக்கள்) வாழ்ந்த ஸ்தலம் என்பதால் 'கடந்தை' என்றும், பார்வதி தேவி இங்கு வழிபட்டதால் 'பார்வதிபுரம்' என்றும் வழங்கலாயிற்று.
பெண் (தேவ கன்னியர்), ஆ (காமதேனு), கடம் (வெள்ளை யானை) ஆகிய மூவரும் பூஜித்ததால் இவ்வூர் 'பெண்ணாகடம்' என்று பெயருற்று, பின்னர் காலப்போக்கில் மருவி 'பெண்ணாடம்' என்றானது.
தேவேந்திரன், தான் செய்யும் சிவ பூஜைக்கு மலர்களைக் கொண்டு வர தேவகன்னிகைகளை பூலோகம் அனுப்புகிறான். இங்குள்ள புஷ்ப வனத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த தேவ கன்னிகைகள், ஒரு தேஜோமயமான லிங்கத்தைக் கண்டு, இங்கேயே தங்கி வழிபடலாயினர்.
நீண்ட நேரமாகியும் தேவகன்னிகைகள் மலர்களுடன் வாராதது கண்டு, காமதேனுவை பூலோகம் அனுப்பி, அவர்களை அழைத்து வரச் சொன்னான் இந்திரன். பூலோகம் வந்த காமதேனு, இந்த புஷ்பவனத்தில் நடக்கும் சிவபூஜையைக் கண்ணுற்று, தானும் பூஜையில் கலந்து கொண்டு, இங்கேயே தங்கி விட்டது.
கோபமுற்ற இந்திரன் கடைசியாக, வெள்ளை யானையாகிய ஐராவதத்தை அனுப்பி விபரமறிந்து வரச் சொன்னான். இவர்கள் செய்யும் சிவபூஜையில் மெய் மறந்த ஐராவதம், தானும் அதில் கலந்து கொண்டு பூஜையில் ஐக்கியமானது. ஐராவதம் இறைவனுக்கு விமானமாக நின்று வழிபட்டதால் 'தூங்கானைமாடம்' எனப் பெயர் கொண்டது.
தான் அனுப்பிய எவருமே திரும்பாதது கண்ட தேவேந்திரன், தானே பூலோகம் வந்தான். இவர்கள் அனைவரும் செய்யும் சிவ பூஜையைக் கண்டு மகிழ்ந்து, தானும் இங்கேயே தங்கி, இவ்விறைவனை பூஜித்து வந்தான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சிவனடியார்க்கு தண்ணீர் வார்க்க நேரம் கடந்து வந்த தனது மனைவியின் கையை வெட்டினார் கலிக்கம்ப நாயனார். வெட்டுண்ட கை மீண்டும் துளிர்க்க அருளிய இறைவன் இருக்கும் ஸ்தலம். ஆதலால் 'கை வழங்கீசர்' என்ற பெயரும் உண்டு.
கலிக்கம்ப நாயனார் வீடு பேறு பெற்ற ஸ்தலம், மெய்கண்டாரின் அவதார ஸ்தலம். மெய்கண்ட தேவரின் தந்தை அச்சுத களப்பாளர் வாழ்ந்த ஊர். அப்பர் ஸ்வாமிகள் தம்முடைய தோளின் மேல் சூலக்குறியும், ரிஷபக் குறியும் பொறித்தருளப் பெற்ற ஸ்தலம் போன்ற பெருமைகளையுடைய ஸ்தலம்.
தேவாரத் திருத்தலம்.