மூலவர்: தோத்தாத்ரிநாதர்் உற்சவர்: வரதராஜர்் தாயார்: வரமங்கை.
முகமண்டபத்தின் வாசலுக்கருகே சங்கநிதி, பதுமநிதி ஆகிய சிற்பங்கள் அழகு சேர்க்கின்றன. கருடாழ்வார் பெருமாளை நோக்கி எழுந்தருளியுள்ளார்.
மூலஸ்தானத்தில் தோத்தாத்ரிநாதப் பெருமாள், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மேற்கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ்க்கரங்களில் அபய-வரத முத்திரை கொண்டும், சதுர்புஜங்களுடன் தரிசனம் தருகின்றார். ஸ்ரீ தேவி - பூ தேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
மூலஸ்தானத்து வாசற்படியில் லட்சுமி குபேரன் நவநிதிகளுடன் இருப்பது கூடுதல் விசேஷம். கருவறை சுவற்றில் ராமாயண-மஹாபாரத தொடர்புடைய சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.
மூலமூர்த்திக்கு முன்னால் உற்சவராக வரதராஜப் பெருமாள் மூலவரைப் போலவே உருவ அமைப்புடன் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். உட்பகுதியில் திருவண்ணாழி எனும் திருச்சுற்று அமைந்துள்ளது.
பிரகாரத்தின் தென்கிழக்கு பகுதியிலுள்ள தனி சந்நிதியில் வரமங்கைத் தாயார், தாமரை மலர் மீது அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள்.
யந்திரத்துடன் கூடிய கற்படிவமாக சக்கரத்தாழ்வார், மற்றும் ஆண்டாள், ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், உடையவர், மணவாள மாமுனிகள் ஆகிய மூல விக்ரஹங்களையும் ஆழ்வாராதிகளின் உற்சவ படிமங்களையும் சேவிக்கலாம்.
அதிஷ்டானம் உபனம், பத்மம், குமுதம் ஆகிய பகுதிகளுடன் காணப்படும் கருவறை சுற்றில், பாகவதம், ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிகாச தொடர்புடைய காட்சிகளையும், காமதேனு, யாளி, சிம்மம் போன்ற உருவங்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் எருதுவாகவும் வேறொரு புறம் மானாகவும் இருக்கும் சிற்பம், ஒரே தலையுடன் இரு விலங்குகள் ஆகிய சிற்பங்கள் மிகவும் அற்புதமாக படைக்கப்பட்டுள்ளன.