தனது அகந்தை மறைய வேண்டி இங்கு தவமிருந்தார் துர்வாசர். வன்னி மரத்தடியில் ஆயிரம் இதழ் தாமரையில் பிரத்யட்சமானார் வைத்யநாதர். மனோன்மணி அம்மை இத்தலத்தில் விரதம் பூண்டு வைத்யநாதரை வழிபட்டு அருள் பெற்றதாக ஸ்தல வரலாறு.
நாகநம்பி எனும் சிவனடியார் இவ்விறைவனை சிரத்தையாக வழிபட்டு வந்தார். அடியாரின் வறுமையைப் போக்க எண்ணிய இறைவன் அனுதினமும் ஒரு பொற்காசைப் படியில் வைத்தருளினார். இதனால் படிக்காசுநாதர் என்ற பெயரைக் கொண்டார்.
வணிகன் ஒருவன் அடியவரின் பொற்காசைப் பெற்றுக் கொண்டு சொற்ப பொருள்களையே கொடுத்து ஏமாற்றி வந்தான். வணிகனுக்கு புத்தி புகட்ட எண்ணிய இறைவன் ஒரு திருவிளையாடலை நடத்தினார்.
வணிகன் வேடத்தில் வந்து இறைவன், வெறும் கற்களை மாணிக்கக் கற்களாக மாற்றி, அடியவரை ஏமாற்றிய வணிகனிடம் விற்றார். வேடதாரி சென்றதும் மாணிக்கங்கள் வெறும் கற்களாக மாறின. அவனது தவறை உணரச் செய்தார்.
இவ்வூர் வழியாக மிளகு மூட்டைகளை ஏற்றி வந்த வியாபாரி ஒருவர், சுங்கவரி செலுத்த மனமில்லாமல், வெறும் உளுந்து எனக் கூறி அதிகாரிகளை ஏமாற்றினார். சந்தைக்குப் போய் பிரித்துப் பார்த்தால் அவ்வளவும் உளுந்தாக மாறி இருந்ததாம். புதுவை நாயகரை பணிந்த வியாபாரி தன் தவறை திருத்திக் கொள்வதாக பிரார்த்தித்தார்.
இக்கோவிலில் பணி புரிந்து விபூதி பெற்றுக் கொண்டு போய் மூட்டையில் தெளித்ததும் மீண்டும் மிளகாக மாறியது.
பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு போய்க் கொண்டிருந்த ஏழை பெண் ஒருத்தி வழியில் வலியெடுத்து தவிக்க, இறைவனே அவளது தாய் ரூபமாக வந்து பிரசவம் பார்த்ததாக கூறுவர்.