திருவலஞ்சுழி எனும் ஸ்தலத்தில், காவிரியிலிருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது.
காவிரியை வெளிக் கொணரும் பொருட்டு அந்த பள்ளத்தில் இறங்கிய ஏரண்ட முனிவர் இங்கு கரையேறினார்.
வலமாக வந்து இவ்வூர் கரையேறியதால் வலம்புரம் எனப் பெயர் கொண்டது.
ஏரண்ட முனிவரின் முடியில் ஏற்பட்ட பள்ளம் போல் சுவாமியின் முடி மீதும் பள்ளம் காணப்படுகிறது. இதனால் இவ்வூர் மேலப்பெரும்பள்ளம் எனப் பெயர் கொண்டது.
விஷ்ணு இவ்விறைவனை வழிபட்டு வலம்புரி சங்கினைப் பெற்றார். ஸ்தலங்கள் தோறும் தரிசித்துக் கொண்டிருந்த அப்பர் சுவாமிகளை இறைவன் இத்தலத்திற்கு வரவழைத்து தரிசனம் தந்ததாக வரலாறு.
மனைவியின் கற்பை சோதிக்க எண்ணிய அரசன் ஒருவன், வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, தான் இறந்து விட்டதாக பொய் தகவல் அனுப்புகிறான். அதை கேள்விப்பட்ட அரசியார் உயிர் துறக்கிறாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் அரசனைப் பற்றிக் கொண்டது.
தோஷத்தைப் போக்கிக் கொள்ள ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்யும்படியும் அப்போது அரண்மனை வாசலில் மணி ஒலிக்கும் எனவும் தோஷம் நீங்கிவிடும் எனவும் அரசனுக்கு அறிவுறுத்தப்பட்டது. தினமும் இக்கோவிலில் அன்னதானம் செய்தனர். பட்டினத்தடிகள் ஒரு நாள் இங்கு வந்து உணவளிக்குமாறு வேண்டினார்.
அவருக்கு உணவு தரப்படவில்லை. பின்பக்கமாக சென்று மடப்பள்ளியிலிருந்து வெளி வரும் வடித்த கஞ்சியை இரு கைகளாலும் அள்ளி குடித்தார். அப்போது அரண்மனை மணி ஒலித்தது. அரசனின் தோஷமும் நீங்கியது.
மன்னன் சென்று பட்டினத்தாரை வரவேற்கும் நிகழ்வை ஐதீகமாக கொண்டாடுகின்றனர்.