பாற்கடலைக் கடைந்த போது திரண்ட வெண்ணையை ஒரு லிங்கமாக அமைத்துப் பூஜித்தார் பிரம்மன். பிரம்மாவிடமிருந்து இந்த வெண்ணை லிங்கத்தை உத்தாலக மகரிஷி பெற்றுக் கொண்டு பூஜித்தார்.
உத்தாலக மகரிஷியின் புதல்வனான ஸ்வேதகேது, தந்தையிடமிருந்து இந்த வெண்ணை லிங்கத்தை வாங்கி வந்து, பிதுர் சாபம் நிவர்த்தியாக வேண்டி, இத்தலத்தில் வைத்துப் பூஜித்து அருள் பெற்றார். பின்னர் லிங்கத்தைக் கையில் எடுக்கும் போது அது இங்கு வேரூன்றி நிலை கொண்டது. இத்தலத்தில் தம்மைப் பூஜிப்பவர்களுக்கு பிதுர் சாபங்கள் நீங்கும் என அசரீரி வாக்கு கேட்டது.
பிறிதொரு சமயம் கண்வ மகரிஷி வெண்ணை நைவேத்யம் செய்து வழிபட்டார். சுதர்மன் என்பவன் அந்த வெண்ணையை எடுத்துத் தின்று விட்டதால் கோபமுற்ற கண்வர், சுதர்மனைப் பூனையாக வடிவம் கொள்ளும்படி சபித்தார்.
சன்னிதிக்குள் அகப்பட்டுக் கொண்டு பசியால் துடித்த பூனைக்கு உதவ வேண்டி, தனது திருமேனியை வெண்ணை லிங்கமாக மாற்றிக் கொண்டார் இறைவன். பூனை உண்டதால் பூனையின் பாதச் சுவடுகள் லிங்கத் திருமேனியில் காணப்படுகின்றன. இதனால் இவ்விறைவனுக்கு நவநீத லிங்கேஸ்வரர் என்று திருநாமம்.
இவ்விறைவனை வழிபட்டு மஹாவிஷ்ணு, பிருகு மகரிஷியின் மனைவியைக் கொன்ற தோஷத்திலிருந்து விடுபட்டார். இங்கு ஒரு கிணறு ஏற்படுத்தி தீர்த்தம் உருவாக்கினார். இந்த தீர்த்தம் உருவானது.
ரேணுகா தேவியை வதைத்த மாத்ருஹத்தி தோஷம் நீங்க பரசுராமர் இவ்விறைவனை வழிபட்டுள்ளார். மேற்கு முகமாக அமர்ந்து கீழ்க்கரையில் உள்ள நவநீதேஸ்வரரைப் பூஜித்தார். இவருக்காக காவிரியை மேற்கு திசையாகத் திரும்பி ஓட அருளினார் இறைவன் என ஸ்தல வரலாறு. வசிஷ்டர் புதிய சரீரம் பெற்ற ஸ்தலம்.