அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில் (திருவிசநல்லூர்)
God Name : கற்கடேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
துர்வாச மகரிஷியின் சாபத்தைப் பெற்ற யக்ஷன் ஒருவன், நண்டு வடிவம் கொண்டான். சாப விமோசனம் வேண்டி நின்ற யக்ஷனை, இத்தலத்திற்குச் சென்று இங்கு கோவில் கொண்டுள்ள சிவலிங்கத்தை வழிபட்டு விமோசனம் பெறுமாறு பணித்தார் துர்வாசர். கற்கடகம் என்றால் நண்டு எனப் பொருள். நண்டு பூஜித்த லிங்கம் என்பதால் இறைவனுக்கு கற்கடேஸ்வரர் எனும் திருநாமம்.
இத்தலத்தைச் சூழ்ந்துள்ள பொய்கையில் பூத்த தாமரை மலர்களைக் கொண்டு, இவ்விறைவனை தினமும் வழிபட்டு வந்தான் தேவேந்திரன். 1008 மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். தினமும் ஒரு பூ குறைவது கண்டு, பொய்கையைத் தானே காவல் காக்க முனைந்தான். ஒரு நாள் ஒரு தாமரைப்பூ நீரில் அமிழ்வதும், அதையடுத்து நீர்க்குமிழ்கள் தோன்றுவதும் கண்டான். பின்னர் ஒரு தாமரைப்பூ இறைவனின் திருமுடியில் இருக்கக் கண்டு அதிசயித்தான். இதற்கு யார் காரணம்? எவ்வாறு நிகழ்ந்தது? எனக் குழம்பிக் கொண்டிருந்த இந்திரனிடம், நண்டு ஒன்று தினமும் ஒரு மலரால் தம்மைப் பூஜிப்பதாக அசரீரியாகக் கூறினர் இறைவன்.
திரு நண்டு தேவன்குடி என்பதே திருந்துதேவன்குடி என்றாகி இருக்க வேண்டும். எப்போதும் இத்தலத்து இறைவனையே வழிபட ஆசைப்பட்ட நண்டு, மறு பிறவியில் இவ்வூரில் பிறந்து குறுநில மன்னனாக ஆண்டு வந்தது. இந்த மன்னனுக்குத் தீராத வயிற்று வலி. நாட்டில் பஞ்சம் வேறு தலைவிரித்து ஆடியது. இவற்றிலிருந்து விடுபட இறைவனை வேண்டி நின்றான் மன்னன். அரண்மனை பணியாட்களை மனிதச் சங்கிலியாக நிற்க வைத்து, அடுத்த கிராமத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து, இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். நாட்டின் பஞ்சமும் அகன்றது - அவனது வயிற்று வலியும் நீங்கியது என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நாளன்று இரவில், காராம்பசுவின் பாலை (21 குடம்) அபிஷேகம் செய்தால், சிவலிங்கத் திருமேனியின் துவாரத்திலுள்ள பொன் நிற நண்டு வெளி வந்து காட்சி தரும் என வசிஷ்ட மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளதாக அபிதான சிந்தாமணி தெரிவிக்கிறது.
ஒன்றரை கிலோ நல்லெண்ணையால் சுவாமியையும், இரண்டு அம்பிகைகளையும் அபிஷேகம் செய்து அதை உடலில் பூசிக் கொண்டால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: கற்கடேஸ்வரர். அம்பாள்: (இரண்டு) அருமருந்தம்மை, அபூர்வ நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கற்கடேஸ்வரர். தேவதேவேசன், ஒளஷதவனேஸ்வரர், அருமருந்துத் தேவர் ஆகிய திருநாமங்களும் உண்டு. சுயம்பு லிங்க மூர்த்தம். கற்கடகம் என்றால் நண்டு எனப் பொருள். நண்டு பூஜித்த லிங்கம் என்பதால் கற்கடேஸ்வரர் என்ற பெயர் கொண்டார். சுவாமியின் சிரசில் நண்டு துளைத்த துளை ஒன்றும் உள்ளது. நண்டாங்கோவில் என்றே அழைக்கின்றனர்.
நண்டு ஒன்று சிவலிங்கத்தைப் பூஜிப்பது போன்ற புடைப்புச் சிற்பம் கல்தூண் ஒன்றில் காணப்படுகிறது.
ஸ்ரீ அருமருந்தம்மை, ஸ்ரீ அபூர்வ நாயகி என இரண்டு அம்பாள்கள் இருக்கின்றனர். இறைவி மருத்துவச்சியாக வந்து சோழ அரசனுக்கு வந்த பக்கவாத நோயைக் குணப்படுத்தியதால் சந்தோஷம் அடைந்த அரசன், அம்பாள் ஒன்றை பிரதிஷ்டை செய்து, அருமருந்தம்மை எனப் பெயர் சூட்டினான். பின்னர் தொலைந்து போன பழமையான அம்பாள் சிலை கிடைக்கப் பெற்றதும் அபூர்வ நாயகி எனப் பெயர் சூட்டி பிரதிஷ்டை செய்தான் என குறிப்பொன்று கூறுகிறது.
வரப்பிரசாதியாக எழுந்தருளியுள்ள ஸ்தல விநாயகர், அழகிய கோஷ்ட மூர்த்தங்கள், நால்வர், பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, கஜலட்சுமி, தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
கிழக்கு பார்த்த கோவில். ராஜேந்திர சோழன் கட்டியது என்பார்கள் (1012 - 1044). கோவிலைச் சுற்றி மாலையிட்டது போல் அகழி போன்ற பொய்கை ஒன்று காணப்படுகிறது. இதில் நவபாஷாணக் கிணறுகள் இருப்பதாகக் கூறுகின்றனர். இதில் நீராடுபவர்கள் சகல நோய்களிலிருந்தும் குணம் பெறுவார்கள். திருமருவு பொய்கை எனப் பெயர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.