அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில், திருவையாறு
God Name : ஐயாறப்பர் எனப்படும் பஞ்சநதீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
வடவாறு, வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி, காவேரி ஆகிய ஐந்து ஆறுகள் பாயும் ஸ்தலம் என்பதால் ஐயாறு என்பர். திரு சேர்த்து திருவையாறு என்றானது. ஜீவன் முக்திபுரம், தட்சிண கைலாஸம், பஞ்சநதம் மற்றும் காவேரிக்கோட்டம் என்றெல்லாம் இத்தலம் போற்றப்படுகிறது. சூரிய புஷ்கரிணி, சந்திர புஷ்கரிணி, கங்கை, பாலாறு, நந்தி தீர்த்தம் ஆகிய ஐந்து நதிகள் சேர்ந்திருப்பதாக ஐதீகம்.
காசிக்கு சமமாக கூறப்படும் ஆறு ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. ஐயாறப்பர் ஆதிசைவராக வந்து தன்னைத்தானே பூஜை செய்த அற்புத நிகழ்வு நடந்த ஸ்தலம் இது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய எல்லா சிறப்புக்களையும் கொண்ட ஸ்தலம். சப்த ஸ்தானம் என்று வழங்கப்படும் ஏழு ஸ்தலங்களுள் முதன்மையான ஸ்தலம். சித்திரை பௌர்ணமி கழிந்ததும் சப்தஸ்தான உற்சவம் சிறப்புற நடைபெறுகிறது.
கைலாஸ தரிசனம் காண வேண்டி ஸ்தல யாத்திரை மேற்கொண்டிருந்த அப்பர் ஸ்வாமிகள் நடக்க முடியாமல், மார்பினால் உந்தி தவழ்ந்து மலை ஏறிக் கொண்டிருந்தார். முனிவர் வடிவில் வந்த இறைவன் தடுத்துப் பார்க்கிறார். எவ்வளவு சொல்லியும் கேளாமல் பயணத்தை தொடர்கிறார் அப்பர் பெருமான். முடிவில் அங்கிருந்த பொய்கை ஒன்றினை காட்டுகிறார் முனிவர். அதில் மூழ்கிய அப்பர், திருவையாற்றில் உள்ள குளம் ஒன்றில் எழுந்திருக்கின்றார். அப்போது அவருக்கு கைலாய காட்சி காட்டியருளினார் இறைவன் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த ஐதீகத்தைக் காட்டும் உற்சவம் ஆடி அமாவாசையில் நடக்கிறது.
இவ்விறைவனை வழிபட்டு அகஸ்தியர் தம் குறுகிய வடிவைப் பெற்றார். அகஸ்தியருக்கு இத்தலத்தில் இறைவன் பஞ்சாட்சர உபதேசம் செய்தருளினார்.
இரண்டு படி அரிசியை அம்பாளிடம் கொடுத்து எல்லா கட்டளைகளையும் செய்யுமாறு சிவபெருமான் கூறினார். அதைப் பெற்றுக் கொண்ட அம்பிகை 32 வித தர்மங்களை செய்து முடித்தாராம். இதன் காரணமாக அம்பாளுக்கு அறம் வளர்த்த நாயகி எனப் பெயர் வந்தது.
இவ்வாலயத்தைச் சேர்ந்த 24 அர்ச்சகர்களுள் ஒருவர் காசிக்கு சென்றிருந்தார். அவர் திரும்பி வர நேரமானதால் மற்ற அர்ச்சகர்கள் அவரது உரிமையை கைப்பற்ற முயன்றனர். அர்ச்சகரின் மனைவி இறைவனை வேண்டி நின்றாள். சிவபெருமானே கிழ அர்ச்சகர் வடிவில் வந்து நித்ய பூஜைகளை செய்து வந்தார். சிறிது காலம் கழித்து காசிக்கு சென்றிருந்த அர்ச்சகர் திரும்பி வந்துவிட்டார். அர்ச்சகர் வடிவில் இருந்த இறைவன், வந்தவரை போலி என வாதித்தார். தீர்ப்பு போலி அந்தணர் பக்கமாயிற்று. முடிவில் சிவபெருமான் தனது வேடம் களைத்து, உண்மை உரைத்து, அனைவர்க்கும் தரிசனம் தந்து மறைந்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார் அடியார்களுடன் இவ்விறைவனை தரிசிக்க வருகையில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. கரையைக் கடக்க உதவ வேண்டி பதிகம் பாடிய சுந்தரருக்கு 'ஓலம்' எனக் குரல் கொடுத்து காவிரியை ஒதுங்கச் செய்த பிள்ளையாரே ஓலமிட்ட விநாயகர் ஆவார்.
பெற்றோரை இழந்த அந்தணச் சிறுவன் ஒருவன் க்ஷேத்ராடனம் செய்து கொண்டிருக்கையில், ஓர் இரவு அவனது கனவில் தோன்றிய யமன், 5வது நாள் உயிரை எடுக்கப் போவதாக கூறி விடுகிறான். 5ம் நாளன்று சிறுவன் இவ்வாலயம் வந்து ஐயாறப்பனை தஞ்சம் புகுந்தான்.
தெற்கு கோபுர வாசலிலுள்ள ஆட்கொண்டாருக்கு சிறுவனைக் காப்பாற்ற உத்தரவிடுகிறார் இறைவன். யமனை காலடியில் போட்டு மிதித்து, சிறுவனைக் காப்பாற்றுகிறார் ஆட்கொண்டார். கார்த்திகை மாதத்தில் இதை ஐதீகமாகக் கொண்டாடுகின்றனர்.
சித்திரை மாதத்தில் பிரம்மோத்ஸவம் முடிந்ததும் நடைபெறும் சப்த ஸ்தான பல்லக்கு விழா புகழ் பெற்றது. ஏழு ஊர் பல்லக்குகளை ஒரு சேர காணும் பாக்யம் கிட்டுகிறது. ஏழு ஊர் பல்லக்குகளும் திருவையாறு தேரடியில் வந்து சேரும்போது, பொம்மையிலிருந்து பூச்சொறிதல் வைபவம் பார்க்க ஆனந்தமாக இருக்கும்.
நவராத்திரி 9 நாட்களும் காலை மாலை இரு வேளைகளிலும் வேத பாராயணம், தேவி மகாத்மியம், அபிராமி அந்தாதி பாராயணம் ஆகியன தொடர்ந்து நடத்துகின்றனர்.
மாசி மாத பௌர்ணமி அபிஷேகத்தின்போது நெய்யினால் நனைத்த கம்பளி ஒன்றினால் சிவலிங்கத்தை சுற்றி விடுவர். இதை தரிசிப்பவர்கள் நோய்கள் நீங்கி நலம் பெறுவர் என ஐதீகம்.
பங்குனியில் திருவாதிரை மற்றும் நந்தி அவதார உற்சவம்.
தேவாரத்திருத்தலம் - சக்தி பீடம் - சப்த ஸ்தான ஸ்தலங்களுள் ஒன்று.
மூலவர்: ஐயாறப்பர் எனப்படும் பஞ்சநதீஸ்வரர்் அம்பாள்: அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தினி.
தெற்கு கோபுர வாசலில், இடப்புறமாக ஆட்கொண்டார் சந்நிதியும், வலப்புறமாக உய்யக் கொண்டார் சந்நிதியும் இருக்கின்றன. இவர்களே துவாரபாலகர்கள்.
வீர ஸ்வரூபமாகக் காட்சி தரும் ஆட்கொண்டாரின் பாதத்தடியில் யமன் படுத்திருக்கின்றான். இவர் சந்நிதி முன்பு நின்று பிரார்த்தனை செய்பவர்களுக்கு உடனே நற்பலன்கள் வழங்குகின்றார். சந்நிதியின் முன்பாக எப்போதும் குங்கிலியம் எரிந்து கொண்டிருக்கும். பிரார்த்தனைக்காரர்கள் அனைவரும் குங்கிலியம் போடுகின்றனர்.
தெற்கு கோபுர வாசல் தாண்டி உள்ளே நுழைந்ததும், இடப்புறமாக ஓலமிட்ட விநாயகர் அமர்ந்துள்ளார். முதலில் இவரை தரிசித்து ஆசி பெற்று, பின்னர் ஆலயத்துள் சென்று மற்ற மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
மூலஸ்தானத்தில் ஐயாறப்பர் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார். புற்று மண்ணால் உருவான அழகிய லிங்கம். தீண்டாத் திருமேனி. புனுகு சட்டம் மட்டுமே சாத்துகின்றனர். ஆவுடையாருக்குத்தான் அபிஷேகம். கிழக்கு பார்த்த சந்நிதி. இவருக்கு பஞ்சநதீஸ்வரர், பஞ்சாபகேசர், செம்பொற்சோதி நாதர், ப்ரணதார்த்திஹரர் ஆகிய திருநாமங்களும் உண்டு.
கோஷ்டத்தில், லகுளீசரையே தட்சிணாமூர்த்தியாக அமைத்துள்ளனர். ஆமையின் முதுகில் காலை ஊன்றியுள்ளார்.
கிழக்கு நோக்கி தனி சந்நிதி கொண்டுள்ள தர்மசம்வர்த்தினி அம்பாள் மிகுந்த வரபிரசாதி. 51 சக்தி பீடங்களுள் தர்ம பீடம் கொண்டவள். திரிசூலி பீடத்தினாள் என தேவி பாகவதம் கூறுகிறது. 12 ராசிகள், 9 கிரகங்கள் கொண்ட முகப்பு விதானத்துடன் கூடிய மண்டபம். இவளுக்கு அறம் வளர்த்த நாயகி, உலகுடைய நாச்சியார், திரிபுரசுந்தரி, தர்மாம்பாள் ஆகிய பெயர்களும் உண்டு. விஷ்ணுவின் அம்சமாக தியாகராஜர் பாடியுள்ளார். பிரதி வெள்ளிக்கிழமை இரவு மஹாலட்சுமி இங்கு வந்து அம்பாளை தரிசிக்கின்றாள்.
ஹரிகுரு சிவயோக தட்சிணாமூர்த்தி தனி மண்டபத்தில் சந்நிதி கொண்டுள்ளார். மேற்கரங்களில் சூலம், கபாலம் ஆகியன கொண்டும், அபய ஹஸ்தமும், சிவஞான போதமும் கொண்ட கீழ்க்கரங்களுடன் காட்சி தருகின்றார். திருமாலுக்கு பஞ்சாட்சர உபதேசம் செய்ததாக ஐதீகம்.
எதிரே தேவேந்திரன் பிரதிஷ்டை செய்த சப்த மாதர்கள் உள்ளனர். சபா மண்டபம் சென்று நடராஜரை தரிசித்த பின்னர், சப்த ஸ்தானங்களுக்குரிய ஏழு சிவலிங்கங்களைத் தரிசிக்கலாம்.
நந்தியம்பெருமான் ஜபம் செய்த செப்பேசர் மண்டபம் முக்திமண்டபமாகப் போற்றப்படுகிறது. நந்தி தேவர், விஷ்ணு, அகஸ்தியர் ஆகியோர் உபதேசம் பெற்று முக்தி பெற்ற இந்த மண்டபத்தில் அமர்ந்து பஞ்சாட்சர மந்திரம் ஜெபித்தால் புண்ணிய பலன்கள் பெருகும் என்பர். இதில் ஸ்தல விநாயகரான ஆதி விநாயகர் எழுந்தருளியுள்ளார். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி சந்நிதிகள் உள்ளன.
தட்சிண கைலாஸம் எனப் போற்றப்படும் கற்கோவில் ஒன்று விமானத்துடன் உள்ளது. சோமாஸ்கந்தர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். ஒலக விதி விடங்கர் எனப் பெயர். விடங்கப் பெருமானின் ஸ்படிக லிங்கத்தையும், நகரத்தார் அளித்த மரகத லிங்கத்தையும் தரிசிக்கலாம். (இரண்டாம் காலத்தில் அபிஷேகம் - காலை 9 மணி)
உத்தர கைலாஸம் எனப்படும் உலோக மாதேவீசுவரம் வடக்கு சுற்றில் உள்ளது. இங்கு தனுசு சுப்ரமண்யஸ்வாமி வில் ஏந்தியக் கோலத்தில் தரிசனம் தருகின்றார். மயிலின் முகம் இடம் மாறி, ஸ்வாமிக்கு வலப்புறமாக உள்ளது.
தெற்கு பிரகாரத்தில் அப்பருக்கு கைலாஸ தரிசனம் தந்த மூர்த்தி எழுந்தருளியுள்ளார். மூன்றாம் பிரகாரத்து தென்மேற்கு மூலையில் நின்று கொண்டு "ஐயாறப்பா.." என்று கூவினால் பல முறை எதிரொலிக்கும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.