அருள்மிகு கபாலீச்வரர் திருக்கோவில் - கபாலீச்வரம் (திருமயிலை - மயிலாப்பூர்)

God Name : கபாலீச்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

சிவபெருமான் பஞ்சாட்சரத்தின் பொருளையும், திருநீற்றின் மகிமையையும் விளக்கிக் கொண்டிருந்தபோது, உமையவள் ஒரு மயிலின் அழகில் மயங்கி கவனம் சிதறினாள். இதனால் கோபம் கொண்ட இறைவன் சபித்ததினால் உமையவள் மயிலாக உருவம் கொண்டாள். மயில் உருவம் கொண்டு பூலோகம் வந்த உமையவள், சாப விமோசனம் வேண்டி கடுந்தவம் புரிந்தாள். இத்தலத்திலுள்ள புன்னை மரத்தடியில் சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தை வழிபட்டு பூஜித்து வந்தாள். அவளது வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் பிரத்யட்சமாகி உமையவளை மணந்து கொண்டார் என்றும், உமையவளே இங்கு கற்பகாம்பாளாகவும், அவளுக்கு காட்சி தந்த இறைவன் கபாலீஸ்வரனாகவும் எழுந்தருளியுள்ளனர் என்றும் ஸ்தல வரலாறு கூறுகிறது. சிவநேச செட்டியார் எனும் சிவபக்தர் ஒருவர் இங்கு வாழ்ந்து வந்தார். அவர் தமது ஒரே மகளான பூம்பாவையை ஞானசம்பந்தருக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என நிச்சயித்திருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக பூம்பாவையை பாம்பு ஒன்று கடித்து இறந்து விட்டாள். அவளை தகனம் செய்து, அவளது அஸ்தியை ஒரு குடத்தில் போட்டு வைத்திருந்தார். ஞானசம்பந்தர் திருமயிலைக்கு வந்தபோது நடந்த விபரங்களை அவரிடம் கூறி அஸ்தியை அவரிடம் காண்பித்தார். உடனே ஞானசம்பந்தர் அந்த குடத்தை கபாலீஸ்வரன் முன்னால் வைத்து அவளை உயிர்ப்பிக்க வேண்டி பல பதிகங்களைப் பாடினார். இறைவனருளால் பூம்பாவை உயிர் பெற்றெழுந்தாள். அவளை இறைத்தொண்டு செய்யும்படி பணித்துவிட்டு சம்பந்தர் சென்றார் என ஸ்தல வரலாறு. பூம்பாவைக்கு சந்நிதி ஒன்றும் உள்ளது. அறுபத்திமூன்று நாயன்மார்களுள் ஒருவரான வாயிலார் நாயனார் அவதரித்த ஸ்தலம் இது. வள்ளுவர் பெருமானும் மயிலையில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆழ்வாராதிகளுள் ஒருவரான பேயாழ்வார் பிறந்த ஸ்தலம். மஸ்தான் சாஹிப் என்ற இஸ்லாமிய மகான் மயிலையில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆதியில் கடற்கரை ஓரமாக இக்கோவில் இருந்ததை, ஞானசம்பந்தரின் பதிகத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. போர்ச்சுகீசியர் கோட்டை கட்டும்போது இக்கோவில் அழிந்து விட்டதாக ஒரு குறிப்பு கூறுகிறது. தற்போதைய கோவில் முன்னூறு ஆண்டுகளுக்கும் உட்பட்டது என்கின்றனர். உமா தேவியார் மயிலுருவில் தவம் புரிந்த ஸ்தலம் என்பதால் மயிலாபுரி எனப் பெயர் கொண்டு மயிலை என்றானதாக கூறுவர். மயில் - ஆர்ப்பு - ஊர் - ஸ்ரீ மயிலாப்பூர் என்றும் கூறுவர். இது ஒரு தேவார திருத்தலம், சென்னையிலுள்ள சப்த ருத்ர ஸ்தானங்களுள் ஒன்று.
மூலவர்: கபாலீச்வரர், அம்பாள்: கற்பகாம்பாள். கிழக்கு நோக்கிய ஆலயமும், அதன் பின்னால் நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளமும் அமையப் பெற்ற ஆலயம் இது. ஆலயத்தையும் குளத்தையும் சுற்றி நான்கு மாட வீதிகள் இருக்கின்றன. கிழக்கு மாட வீதியிலுள்ள ராஜ கோபுரத்தின் வழியாக உள்நுழைந்ததும், எதிரே சந்நிதி கொண்டுள்ள நர்த்தன கணபதியை வணங்கி ஆசி பெற்று, வலப்புறமாக சென்றால் உண்ணாமுலையம்மை - அண்ணாமலையாரை தரிசிக்கலாம். தெற்கு பிரகாரத்திலுள்ள சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் சிங்காரவேலனை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அத்தனை அழகு. அழகிய விமானம். வள்ளி - தெய்வயானை தேவியர்களுடன் மயில் மீது அமர்ந்த கோலம். ஐப்பசியில் ஸ்கந்த சஷ்டி திருவிழா. பங்குனி பிரம்மோத்ஸவத்தில் வீதிவுலா வருவார். தெப்ப உற்சவத்தில் சிங்காரவேலர் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி. தொடர்ந்து திருமுறை மண்டபம், பழநி ஆண்டவர் மற்றும் வாயிலார் நாயனார் சந்நிதிகள் மற்றும் வேத மண்டபம் ஆகியன காணலாம். வீதிவுலா செல்லும் பஞ்ச மூர்த்திகளை இங்கு வைத்துதான் அலங்காரம் செய்வார்கள். அன்னை கற்பகாம்பாள் நவராத்திரி தினங்களில் இங்கு எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். மேற்கு பிரகாரத்திலுள்ள மேலைக் கோபுரம் வழியே வெளிப்புறமாக சென்றால் திருக்குளத்தைக் காணலாம். வாசலின் இரண்டு பக்கங்களிலும் கற்பக விநாயகரும், பாலசுப்ரமண்யரும் சந்நிதி கொண்டுள்ளனர். (இந்த வாசல் வழியாக கோவிலுக்குள் வருவோரும் உண்டு). இந்த பிரகாரத்தில் கொடிமரமும் பலிபீடமும் உள்ளன. அழகான நந்திப் பெருமான் எழுந்தருளியுள்ளார். மூலஸ்தானத்தில் சிவ லிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் கபாலீச்வரர். மேற்கு பார்த்த சந்நிதி. பஞ்சமுகங்களில் சத்யோஜாத திருமுகம் கொண்டுள்ளார். கருவறையினுள் சூரிய பிரபை, சந்திர பிரபை தீபங்களும், வெளியே அலங்கார பிரபை தீபமும் ஒளி கூட்டுகின்றன. சுவாமி கோஷ்டத்தின் ஆரம்பத்தில் நடராஜப் பெருமான் சந்நிதி கொண்டுள்ளார். சிவகாமசுந்தரி உடனிருக்க வியாக்ரபாதரும் பதஞ்சலியும் அருகே உள்ளனர். இதையொட்டியுள்ள சந்நிதியில் சிங்காரவேலரின் உற்சவ மூர்த்தங்கள் உள்ளன. பரிவார தேவதைகள், உற்சவ மூர்த்திகள் ஆகியன தரிசித்து, தட்சிணாமூர்த்தியை தியானம் செய்து வலத்தை தொடர்ந்தால் கற்பகாம்பாளின் உற்சவ விக்ரஹத்தைக் காணலாம். சோடஷ கௌரிகளுள் வரதான கௌரி எனப் போற்றப்படுபவள். அருகே சோமாஸ்கந்தர் எழுந்தருளியுள்ளார். கண்களையும் மனதையும் விட்டு அகலாத எழில் உருவம். தெற்கு நோக்கிய மூலஸ்தானத்தில் அன்னை கற்பகாம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வரப்பிரசாதி, வரகௌரி எனப் போற்றப்படும் இவள் கருணையே உருவானவள். வடக்கு பிரகாரத்தில் முகமண்டபத்துடன் கூடிய சந்நிதியில் புன்னைவனநாதரை தரிசிக்கலாம். அம்பிகை மயிலாக வந்து புன்னைவனநாதரை தரிசிக்கும் காட்சியைக் காணலாம். இது ஸ்தல ஐதீகத்தை விவரிக்கின்றது. அருகே ஸ்தல விருட்சமான புன்னை மரமும், கோசாலையும் இருக்கின்றன. கிழக்கு பிரகாரத்திலும் சந்நிதிகளை தரிசிக்கலாம். இரவு 9 மணி பூஜை ஷோடஸ உபச்சாரங்களுடன் நடைபெறும் பூஜையை காண ஆனந்தம் பெருகும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.