அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில் - குரங்கணில்முட்டம் (தூசி)
God Name : வாலீஸ்வரர் எனப்படும் கொய்யா மலர் நாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
வாலி, இந்திரன், யமன் ஆகிய மூவரும் கயிலாயம் சென்று தாங்கள் கொண்ட சாபங்களிலிருந்து விடுபட வேண்டி பிரார்த்தித்து, பின்னர் மூவரும் இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டு வினை நீக்கம் பெற்றனர். ரிக்ஷரஜசு எனும் குரங்கு முதலில் ஆணாக இருந்து பின்னர் பெண்ணாக மாறியது. ரிக்ஷரஜசுவிற்கும் இந்திரனுக்கும் பிறந்த வாலி குரங்கு வடிவம் கொண்டவன். பல சிவன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்த வாலி, இத்தலத்திற்கு வந்து, இவ்விறைவனை வழிபட்டதும், குரங்கு வடிவம் நீங்கப் பெற்று, மனித உடலும் குரங்கு முகமும் பெற்றான் என ஸ்தல வரலாறு. இவ்விறைவனை வழிபட வந்த வாலி தனது கைகளால் மலர்களை பறிக்காமல் மரத்தை உலுக்கி மலர்களை சுவாமி மீது விழச் செய்து வழிபட்டான். அதனால் சுவாமிக்கு கொய்யா மலர் நாதர் என்ற பெயர் வந்தது. வாலிக்கு காட்சி தந்த இறைவன், அவனது வேண்டுகோளின்படி வாலீஸ்வரர் எனும் திருநாமத்தோடு இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார் என ஸ்தல வரலாறு. கௌதமரின் மனைவி மீது மோகம் கொண்டு அவரது சாபத்தை பெற்ற இந்திரனும் இவ்விறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற வேண்டி அணில் வடிவம் கொண்டு இத்தலம் வந்து, இவ்விறைவனை பூஜித்தான். மார்க்கண்டேயன் விஷயத்தில் தனது பணியை ஒழுங்காக மேற்கொள்ளாத யமனும் காக்கை வடிவம் கொண்டு இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டு நலன் பெற்றான் என ஸ்தல வரலாறு. தூசி எனும் பெயர் கொண்ட பல்லவ மன்னருடைய படை அணி இருந்த ஊர் என்பதால் இவ்வூருக்கு தூசி என்ற பெயர் வந்தது. கி.பி. 367ல் மகேந்திர வர்மன் காலத்தில் கட்டப்பட்ட கோவில். ஒரு கற்பாறையின் மீது அமைந்துள்ளது. சந்நிதியிலும் கல் ஜன்னலே உள்ளது. காகம் தன் மூக்கால் தோண்டி ஏற்படுத்திய தீர்த்தம் காக மடு எனும் பெயரில் இருக்கின்றது. தேவாரத்திருத்தலம்.
மூலவர்: வாலீஸ்வரர், அம்பாள்: இறையார் வள்ளியம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் வாலீஸ்வரர். சிறிய லிங்கத் திருமேனி. சுயம்பு மூர்த்தம். மேற்கு பார்த்த சந்நிதி. வாலி பூஜித்ததினால் இறைவனுக்கு வாலீஸ்வரர் என்று பெயர். இவருக்கு கொய்யா மலர் நாதர் என்ற பெயரும் உண்டு. மூலவர்க்கு கரும்புச்சாறு அபிஷேகம் விசேஷம் எனக் கூறுவர். சித்திரை மாதத்தில் சூரியனது ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் இறையார் வள்ளியம்மை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். மிகவும் அழகான திருவுருவம். இளமையான தோற்றத்தில், கைகளில் வளையல்களுடன் காட்சி தருகின்றாள். இவருக்கு பூரண கங்கண தாரிணி என்றொரு பெயரும் உண்டு. புத்திர பாக்கியம் மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர், அம்பாளுக்கு கைகள் நிறைய வளையல்கள் போட்டு, அழகு பார்த்து, பின்னர் தாங்கள் அணிந்து கொள்கின்றனர். மூஞ்சூறு விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், நால்வர், தாமரை பீடத்தில் விநாயகர் மற்றும் சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் யாவும் அழகாக இருக்கின்றன. பேரெழில் சிற்பமாக விஷ்ணு துர்க்கை எழுந்தருளி உள்ளார். வலது கரத்தில் பிரயோக சக்கரமும், இடது கரத்தில் சக்கர முத்திரையும் கொண்டு காட்சி தருகின்றாள். காலடியில் மகிஷாசுரன் இல்லை. குரங்கு (வாலி) - அணில் (இந்திரன்) - முட்டம் (யமன்), (முட்டம் என்றால் காகம்) ஆகிய மூன்றும் வழிபட்டதால் இவ்வூருக்கு குரங்கணில்முட்டம் எனப் பெயர் வந்தது. நுழைவாசலில் குரங்கு பூஜிப்பதை வடபாலும், அணிலும் - காக்கையும் பூஜிப்பதை தென்பாலும் சுவர்சிற்பங்களாக வைத்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.