அருள்மிகு வைத்யநாதஸ்வாமி திருக்கோவில் (வைத்தீஸ்வரன் கோவில்)
God Name : மூலவர்: ஸ்ரீ வைத்யநாதஸ்வாமி, சிறப்பு மூர்த்தம்: அங்காரகன்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
புள் என்றால் பறவை (ஜடாயு), இருக்கு என்றால் ரிக் (வேதம்), வேள் என்றால் முருகன், ஊர் என்பது ஸ்தலத்தைக் குறிக்கும். சூரியன், ஜடாயு எனும் பறவை, ரிக்வேதம், முருகன் ஆகியோர் பூஜித்ததால் இவ்வூர் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயரை கொண்டது. சுவாமி வைத்தியநாதராக எழுந்தருளியிருப்பதால் வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் வினை தீர்த்தான் கோவில் எனப் பெயர் கொண்டது. தாரகாசுரனோடு முருகன் போர் புரிந்ததில் காயமடைந்தவர்களின் காயங்களைப் போக்க அம்மை-அப்பனை வேண்டினார் முருகப் பெருமான். சிவபெருமான் வைத்தியநாதராக கிளம்பி வந்தார். அம்பிகை கரங்களில் தைலமும், வில்வ மண்ணும், சஞ்சீவி மூலிகையும் கொண்டு தையல் நாயகியாக உடன் வந்தார். வைத்தியநாத சுவாமி தனது சூலத்தினால் ஒரு தீர்த்தம் உண்டாக்கினார். தாரகாசுர போரில் கீழே விழுந்து விட்ட தேவர்களின் அங்கங்களில் இந்த தீர்த்தத்தை பெய்து, காயங்களை அகற்றிப் பொருத்தினார் சுவாமி. தேவர்கள் உயிர் பெற்றனர். இதுவே அங்க சந்தான தீர்த்தம். கயிலையிலிருந்து இத்தலம் வந்த பார்வதி பரமேஸ்வரர்கள் அங்காரகனின் நோயைக் குணப்படுத்தினார். செங்குஷ்டம் தோன்றி பொலிவிழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அங்காரக பகவானின் நோயைக் குணப்படுத்தி, அங்காரகனை வணங்குபவர்களுக்கு எந்த நோயும் வராது என்ற வரமும் தந்தார் வைத்தியநாதர். தன்வந்திரிக்கு வைத்திய சாஸ்திரங்களை கற்றுக் கொடுத்துவிட்டு, தானே இங்கு நிரந்தரமாக தங்கி பக்தர்களை ரட்சிக்கிறார். சத்ரு சம்ஹாரம் செய்ய முருகன் இங்கு வேல் பெற்றதாக கூறப்படுகிறது. பங்குனி மாத பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாள், முத்துக்குமரன் வைத்தியநாதரை பூஜித்து, செண்டு பெறும் காட்சியை ஐதீகமாகக் கொண்டாடுகின்றனர். அம்பாள் சந்நிதிக்கு எதிரிலுள்ள (குளம்) சித்தாமிர்த தீர்த்தம் மிகவும் விசேஷமானது. காமதேனு தன் பாலால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, அது பெருகி வழிந்தோடி, இக்குளத்தில் கலந்திருப்பதாக குறிப்பு ஒன்று கூறுகிறது. சித்தர்கள் பலர் இந்த தீர்த்தத்தினால் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டுள்ளனர். இக்குளத்தருகே தவம் செய்து கொண்டிருந்த சதாநந்தர் எனும் முனிவரின் மீது, பாம்பால் துரத்தப்பட்ட தவளை ஒன்று பாய்ந்தது. தவத்திற்கு இடையூறு விளைவித்த பாம்பு-தவளை இரண்டும், இப்பகுதியில் இல்லாதிருக்கக் கடவது என்று சபித்தார். இன்றளவும் இக்குளத்தில் தவளைகளும், பாம்புகளும் இருப்பதில்லை. ஆலயத்தின் கீழ்திசையில் பைரவ மூர்த்தியும், மேற்திசையில் வீரபத்ரரும், தெற்கே கற்பக விநாயகரும், வடவாயிலில் காளி தேவியும் காவல் புரிகின்றனர். தேவாரத் திருத்தலம், நவக்கிரக ஸ்தலங்களுள் ஒன்று - அங்காரக ஸ்தலம். திருச்சாந்துருண்டை. வளர்பிறையில் மங்கலமான நாள் ஒன்றை தேர்ந்தெடுத்து, அங்க சந்தான தீர்த்தத்தில் மூழ்கி, நடுமண் எடுத்து, கோவிலின் விபூதி குண்டத்து விபூதியை சேர்த்து, சித்தாமிர்த நீர் கலந்து, பஞ்சாட்சர மந்திரம் ஓதி, பிசைந்து முத்துக்குமார சுவாமிக்கு முன்பாக உள்ள குழி அம்மியில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து, தையல் நாயகி பாதங்களில் வைத்து வணங்க வேண்டும். இதுவே திருச்சாந்துருண்டை. (தயார் செய்த நிலையில் கிடைக்கிறது)
மூலவர்: ஸ்ரீ வைத்யநாதஸ்வாமி, சிறப்பு மூர்த்தம்: அங்காரகன், அம்பாள்: ஸ்ரீ தையல் நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ வைத்யநாதஸ்வாமி. அழகான தேஜோமய லிங்கம்.
புள்ளிருக்கும் வேளூரான் என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுயம்பு மூர்த்தம். மேற்கு பார்த்த சந்நிதி.
புரட்டாசி மாதம் 19, 20, 21 தேதிகளிலும், மாசி மாதம் 19, 20, 21 தேதிகளிலும் சூரிய பகவான் தனது ஒளிக்கதிர்களால் ஸ்வாமி மீது படர்ந்து, சூரிய பூஜை செய்கின்றார்.
உட்பிரகார சுற்றின் நடராஜர் சபையில், சிவகாமி உடனாய நடராஜர் மற்றும் மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார் ஆகியோரை தரிசிக்கலாம். மஹாலட்சுமி, பஞ்ச லிங்கங்கள், சஹஸ்ர லிங்கம், பைரவர் என அநேக மூர்த்தங்கள் உள்ளன.
வைத்யநாதஸ்வாமி சந்நிதியின் பின்புறம் தன்வந்திரி பகவான் கோவில் கொண்டுள்ளார். தன்வந்திரி மண்டபம் என்று பெயர். அமுத சலசம், கமண்டலம், கதை ஆகியன கரங்களில் ஏந்தி தரிசனம் தருகின்றார். நவகிரகங்கள் அனைத்தும் ஸ்வாமி சந்நிதிக்கு பின்புறம் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தருகின்றனர்.
விபூதி நிரம்பியுள்ள ஜடாயு குண்டம். ஸ்ரீ ராமன் ஜடாயுவிற்கு இறுதிக்கடன்கள் செய்த இடம். மண்டபத்து மேல் - ராம-லக்ஷ்மணர்கள், வசிஷ்டர், விஸ்வாமித்ரர் வடிவங்கள். எதிரே மேல்பக்கம் நோக்கினால் சட்டைநாதரை தரிசிக்கலாம். அடுத்து உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கங்காளர், பிட்சாடனர், கங்கா விசர்ஜனர் ஆகிய திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன.
அங்காரகன் உற்சவ மூர்த்தியாக தனி சந்நிதி கொண்டுள்ளார். கதை, சக்தி, சூலம், அபய ஹஸ்தம் கொண்டு சதுர்புஜங்களுடன் காட்சி தருகின்றார். செவ்வாய் கிழமைகளில், ஆட்டுக்கிடா வாகனமேறி பிரகார உலா வருகின்றார். செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான பரிகாரங்களும், அர்ச்சனைகளும் செய்கின்றனர்.
மேற்கு பிரகாரத்தில் ஸ்வாமி சந்நிதிக்கு அருகில் செல்வமுத்துக்குமாரஸ்வாமி கோவில் கொண்டுள்ளார். முத்தையா என்று அன்புடன் அழைக்கப்படுபவர். இரு தேவியர்களும் உடன் உள்ளனர்.
அர்த்தஜாம பூஜையின்போது (இரவு 9.00 மணி) தினமும், செல்வமுத்துக்குமாரஸ்வாமிக்கு - நேத்திரப்பிடி சந்தனம் (அதாவது பச்சைக் கற்பூரம் கலந்த சந்தனம்), எலுமிச்சம்பழம், திருநீறு ஆகியன பாதத்தில் வைத்து வணங்குவர். பால், பழம், பால் சோறு ஆகியனவற்றை நைவேத்யம் செய்கின்றனர். அம்மையும் அப்பனும் பிள்ளைக்கு சோறூட்டி, தாலாட்டு பாடி தூங்க வைப்பதாக ஐதீகம். இதனை புழுக்காப்பு தரிசனம் என்பர்.
முத்துக்குமரனின் சந்நிதியில் முத்துக்குமரனே வழிபடும் ஸ்படிக லிங்கம் ஒன்று பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை மற்றும் உச்சி வேளைகளில் இந்த முத்து லிங்கத்திற்கு அபிஷேகங்கள் செய்வார்கள்.
மூலவரின் வலப்புறமாக தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் தையல் நாயகி எழுந்தருளியுள்ளார். நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தரும் அழகு திருவுருவம். ஸ்வாமி இங்கு வரும்போது கூடவே தைலப் பாத்திரம் தாங்கி வந்தவள் என்பதால் தைலாம்பாள் எனப் பெயர் கொண்டு பின்னர் மருவி தையல் நாயகி என்றானாள்.
உட்பிரகாரத்தில் பிள்ளையார், சுப்ரமண்யர், மஹாவிஷ்ணு, ஆடிப் பூர அம்மன் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். ஸ்வாமி - அம்பாள் - முத்துக்குமரர் சந்நிதிகள் அமைந்திருக்கும் விதம், சோமாஸ்கந்த அமைப்பை போன்றுள்ளது. ஐந்து கோபுரங்கள் ஒரே நேர்க்கோட்டில் உள்ளன.
கீழை பிரகாரத்திலுள்ள வேம்படிமால் எனும் புராதன வேம்பு மரத்தடியில் ஆதி வைத்யநாதர் எழுந்தருளி அருள் புரிகின்றார்.
சித்தாமிர்த தீர்த்தக் குளம் அழகான படிக்கட்டுகளும், நீராழி மண்டபமும் கொண்டுள்ளது. வடகிழக்கு திசையில் அங்க சந்தான தீர்த்தம் உள்ளது.
தன்வந்திரி சித்தரின் ஜீவ சமாதி உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.