அருள்மிகு ஆமருவியப்பன் திருக்கோவில் (தேரழுந்தூர்)
God Name : மூலவர்: ஸ்ரீ தேவாதிராஜன், உற்சவர்: ஆமருவியப்பன்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
உபரிசரவஸு என்னும் மன்னன் எப்போதும் தனது தேரில் அமர்ந்து ஆகாயத்தில் சஞ்சரிக்கும் வரத்தைப் பெற்றவன். தேரின் நிழல் எதன் மீது பட்டாலும் அதற்கு துன்பங்கள் நேர வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தான். இதனால் அகங்காரம் கொண்டு அலைந்தான். இத்தலத்தின் மீது தேர் பறக்கும்போது 'கீழே தேரை இறக்குங்கள், இத்தலத்து தேவாதிராஜனை சேவித்துவிட்டுப் போகலாம்' என்று அவனது மனைவி கூறியதை பொருட்படுத்தாது, தேர் வேகமாக செல்ல உத்தரவிட்டான்.
அவனது அகம்பாவத்தை அடக்க நினைத்த தேவாதிராஜன் கருடாழ்வாருக்கு சமிக்ஞை செய்தார். கீழே படிந்த தேரின் நிழல் மீது தனது பெருவிரலை வைத்து அழுத்தினார் கருடாழ்வார். தேரானது வேகமாக கீழே இறங்கி கோவிலுக்கு முன்னாலுள்ள திருக்குளத்தில் விழுந்தது. கீழே விழுந்த தேர் அழுந்தப் பெற்ற இடம் என்பதால் தேர் அழுந்தூர் (தேரழுந்தூர்) என இவ்வூருக்கு பெயர் வந்தது.
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இடையே நடைபெற்ற விவாதம் ஒன்றினில், பாரபட்சமாக தேவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய உபரிசரவஸுவை, முனிவர்கள் சபித்து பூமியில் விழச் செய்தனர் என்றும், அப்போது அவனது தேர் அழுந்தப் பெற்றதென்றும், கதை ஒன்று வழக்கில் இருக்கின்றது.
அகஸ்தியரின் யோசனைப்படி, செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டி தவமிருந்தான் உபரிசரவஸு. பிரத்யட்சமான தேவாதிராஜன் அவனது தேரை மீண்டும் வானில் பறக்கவிடலாம் எனும் வரத்தையும், தேர் அழுந்திய குளத்தில் நீராடி தன்னை சேவிக்கும் பக்தர்களுக்கு நற்கதி அளிப்பேன் எனும் வரத்தையும் அருளினார்.
ஆயிரம் குடங்களில் வெண்ணெய் சேகரித்துக் கொண்டு வந்து காலடியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆமருவியப்பன் கூறியதாகவும், எவ்வளவு முயன்றும் உபரிசரவஸுவினால் 999 குடங்களில் மட்டுமே சேகரிக்க முடிந்ததாகவும், ஒரு காலிக் குடத்தை நடுவில் வைத்து 1000 குடங்களில் வெண்ணெய் இருப்பதாக கூறி கண்ணனை ஏமாற்ற உபரிசரவஸு முயன்றதாகவும், எல்லாக் குடங்களையுமே காலிக் குடங்களாக கண்ணன் மாற்றி வைத்து உபரிசரவஸுவுக்கு பாடம் கற்பித்ததாகவும், பின்னர் மன்னிப்பு கேட்ட உபரிசரவஸுவிற்கு வரங்கள் தந்ததாகவும் - கூறப்படுவதுண்டு.
கோகுலத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், பசுக்களை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு தண்ணீர் அருந்த யமுனைக்கரைக்கு சென்றான். வேடிக்கை செய்வதாக நினைத்துக்கொண்டு, பிரம்மா யமுனைக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களை, காவிரிக்கரையிலுள்ள தேரழுந்தூரில் கொண்டு வந்து விட்டார். திரும்பி வந்த கிருஷ்ணன், நடந்ததை யூகித்து விட்டான். புதியதொரு பசுக்கூட்டங்களை தோற்றுவித்தான் கண்ணன். தனது முயற்சி தோல்வி அடைந்ததைக்கண்ட பிரம்மா, ஆவினங்களுடன் தேரழுந்தூருக்கு வந்து கோவில் கொள்ளுமாறு, கண்ணனிடம் பிரார்த்தித்தார். பிரம்மாவின் வேண்டுகோளுக்காக இங்கு வந்தவரே ஆமருவியப்பன்.
கருடாழ்வாரிடம் ஒரு விமானத்தையும், வைர முடியையும் கொடுத்து அவற்றுக்குரிய பெருமாள்களிடம் சேர்ப்பிக்க சொன்னான் தேவேந்திரன். வைர முடியை திருநாராயணபுரத்து செல்லப் பிள்ளையிடமும், விமானத்தை இத்தலத்து தேவாதிராஜனிடமும் சேர்ப்பித்தார் கருடாழ்வார். இதனால் மகிழ்ந்த பெருமாள் கருடாழ்வாருக்குத் தம் பக்கத்திலேயே இருக்க இடம் தந்தார் என ஸ்தல வரலாறு. மற்ற கோவில்களில் பெருமாளை எதிர்நோக்கி இருக்கும் கருடாழ்வார், இங்கு மட்டும் பக்கத்தில் இருக்கும் காரணத்தை விளக்குகிறது ஸ்தல புராணம்.
அகஸ்தியரிடம் பெற்ற சாபத்திலிருந்து விடுபட வேண்டி தவமிருந்த காவிரித்தாய், தேவாதிராஜன் அருகே இடம் பிடித்தாள் என ஸ்தல வரலாறு.
உபரிசரவஸுவின் தேரை பூமியில் அழுத்திய நிகழ்வு நடைபெற்ற நாள் தை அமாவாசை தினம். தர்சம் என்றால் அமாவாசை. இதனால் தேர் அழுந்திய திருக்குளத்திற்கு தர்சன புஷ்கரிணி எனப் பெயர் வந்தது.
வடகலை சம்ப்ரதாயம். பாஞ்சராத்திர ஆகம முறைப்படி பூஜைகள் நடக்கின்றன.
பஞ்ச கிருஷ்ணாரண்யங்களுள் ஒன்று. 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: ஸ்ரீ தேவாதிராஜன், உற்சவர்: ஆமருவியப்பன், தாயார்: செங்கமலவல்லி.
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ தேவாதிராஜன் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பீடத்தோடு சேர்த்து 12 அடி உயரம் கொண்ட திருமேனி. சங்கு, சக்கரம், கதை மற்றும் அபய ஹஸ்தம் ஆகியவற்றுடன் சதுர்புஜங்களைக் கொண்டவர். மார்பில் மஹாலட்சுமி இருக்கின்றாள்.
ஆஜானுபாகு தோற்றம் கொண்ட அழகிய சாளக்ராம திருமேனி. விரல் நகங்களும், நரம்புகளும் தெரியும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ள அற்புதமான திருவுருவம்.
இடது புறம் கருடாழ்வாரும், வலது புறம் பிரஹ்லாதனும் கூப்பிய கரங்களுடன் நின்ற கோலத்தில் தரிசனம் தருகின்றனர். மண்டியிட்டு வணங்கும் நிலையில் காவிரித்தாயின் சிலாத்திருமேனி காணலாம். மூலவர்க்கு முன்பாக குக்குடாசனம் எனும் ஆசன நிலையில் அமர்ந்த கோலத்தில் மார்க்கண்டேயர் காணப்படுகிறார்.
மூலவரின் திருவுருவத்திற்கு முன்னால் உற்சவ மூர்த்தி ஸ்ரீ ஆமருவியப்பன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஜீவ களையோடும் கொள்ளை அழகுடனும் காட்சி தரும் ஆமருவியப்பனின் திருமுக மண்டலம் கண்களையும் மனசையும் விட்டு அகலாது. ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
'ஆநிரை மருவி மேய்ந்த' என்ற விளக்கத்திற்குரிய திருநாமம் கொண்டவர். 'ஆ' என்றால் பசு, 'மருவி' என்றால் அணைத்துக் கொள்ளுதல் - அதாவது, பசுக்கூட்டங்களுக்கு ஆதரவு நல்கி, அவற்றை அரவணைத்து ஆதரிப்பவர் என்று அர்த்தம். வடமொழியில் 'கோசகன்' என்பர்.
பசு ஒன்று ஆமருவியப்பனின் திருவடிகளே போதும் என்று திருவடிகளைப் பார்த்துக் கொண்டிருக்க, கன்றுக்குட்டியோ 'உன் திருமுகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்' என்று அண்ணாந்து கண்ணனையே பார்த்துக் கொண்டிருக்கும் பாவனையில் இருக்கின்றன. ஸ்ரீ சுதர்ஸனர் மற்றும் சந்தான கோபாலன் ஆகியோரின் உற்சவ விக்ரஹங்கள் அழகாக இருக்கின்றன.
பெருமாள் சந்நிதிக்கு தென்புறமாக உள்ள சந்நிதியில் செங்கமலவல்லித் தாயார் எழுந்தருளி சேவை சாதிக்கின்றாள். கிழக்கு பார்த்த சந்நிதி. கருவறையின் விமானத்தின் பின்புறமாக மஹாலட்சுமியின் திருவுருவத்தைப் பார்க்கலாம்.
ஸ்ரீ யோக நரசிம்மர், சீதா தேவி - லக்ஷ்மணன் - ஹனுமன் சகித ஸ்ரீ ராமபிரான், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய மூர்த்தங்களை தனித்தனி சந்நிதிகளில் சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.